மஞ்சள் குளித்த நிலவு
புன்னகை பூத்த செவ்விதழ்
என் பத்து வயதில் பரலோகம்சென்றவள்!
பசை போட்டல்ல பாசம் போட்டு
ஒட்டிவிட்டவள் நெஞ்சினுள்!
விருந்தாளி வீட்டுக்கு வந்தால்
"வாங்க" ஒற்றைச் சொல்லோடு
சமையற்கட்டுக்குள் ஒளிந்து கொள்வாள்!
யோசித்ததில்லை அந்த வயசில்!
அப்பாவை நான் எதிர்த்து பேச
காலையில் அவள் கண்கள் வீங்கியிருக்கும்!
புரியமுயற்சித்ததில்லை அவளை!
பள்ளிப்போகையிலே கனிந்திருக்கும் முகம்
மாலையில் வீடு திரும்புகையில் கன்னியிருக்கும்!
காரணம் கேட்டதில்லை அவளை!
தீர்க்கமாய் ஒருபுன்னகை புரிந்து
அமைதியாய் அடிக்கடி ஒன்னு சொல்லுவாள்
"கையில வச்சு தாங்குற புருஷனானாலும்
சொந்த கால்ல நிக்கனும் நீ!"
புருஷன்னு கேட்டவுடனே போம்மான்னு
வெட்கிஓடியது நினைவிற்கு வந்துதொலைக்கிறது!
திடீரென ஒருநாள் தீக்கிரையாய்
அவள் ............
நினைக்க மறந்தாலும்
மறக்க நினைக்கவில்லை!
கனவில் அடிக்கடி வருவாள் முன்னெல்லாம்!
இருவரும் பேசியதில்லை!
தலை கோதுவாள்!
கன்னம் கிள்ளுவாள்!
அவள் சுதந்திரமாய் சுவாசிப்பதாய் எனக்குள் தோன்றும்!
வேகமாய் விழி திறந்தால் கண்ணீர்
நனைத்திருக்கும் தலையணையை
கல்யாணமானதிலிருந்து கொஞ்ச நாளாக் காணோம்
காத்திருக்கிறேன் இன்றாவது வருவாளானு
ஒன்னே ஒன்னு சொல்லனும்
அம்மா
அப்பாவும்,புருஷனும் ஒரே மாதிரின்னு........
Bookmarks