நான் அறிந்த
தவமணி அக்கா
விசித்திரனானவள்
எதிலும்
ஜெயிக்க வேண்டும் அவளுக்கு...
தாயம் ஆடுகையில்
அவள் தோற்பதாய்
தோற்றமிருந்தால்,
காய்களைக் கலைத்து
கட்டங்களை அழித்துவிடுவாள்.
தேடிக் கிடைக்காத
ஆலிவ் பச்சை புடவைக்காய்
ஒரு தீபாவளிக்கு
கோடித்துணியே அவள் உடுத்தாததாய்
ஞாபகம்
பின்னொரு நாள்
மணமாகி அவள் போக...
என்னைவிட்டு
தூரம் போனது
அவளின் நேசம்
தவமணிக்கு வாச்சவன்
மொடாக் குடியனாம்,
கூத்திகூட இருக்காம்
அடி உதையின்னு
இம்சிக்கிறானாம்
ஊருக்குள் பேசிக்கொண்டார்கள்.
சிவராத்திரிக்கு
வந்திருந்த
அக்காவைப் பார்த்தேன்
ஊர் சொன்னது
உண்மை எனப் புரிந்தது
ஏனிந்த வாழ்க்கை உனக்கு?
எங்கே போனது உன் தைரியம்?
விலகி வந்துவிடேன்
பழகிய பாசத்தில்
படபடத்தேன்
அவளிடம்
கண்களுள் நீர் தேக்கி
மேடிட்ட தன் வயிறு தொட்டு
என்னைப் பார்த்தாள் அக்கா...
தாயாய்
தோற்றுத்தான் போகின்றனர்
எல்லா தவமணிகளும்!
நன்றி சினேகிதி
Bookmarks