அநேக திருமண வீடுகளில்
நானும் இருக்கிறேன்..
வித்தியாசமொன்றுதான்...நீ பந்திக்கு பின்..
நான் பந்திக்கு முன்
அடுத்தவேளை
உணவு யார் வீட்டில்..
எனக்குள்ளும்தான் வினா..
விருந்தினன் நான்!
நல்லவேளை தப்பிவிட்டாய்..
கிழிந்த உடையில்
தைத்துக் கொண்டாய் வயிற்றை..
உருப்படியாய்
உனக்குமொரு உடையிருப்பின்..
வறட்டுக் கவுரதையில்
சுருண்டிருப்பாய்..என்போலே..
இரு கரங்களிருப்பதாய்
எள்ளி நகைப்போரிடம் சொல்..
நான்கு வயிறிருப்பவன்படும்
வேதனைகளை..
உனக்கு வானம் கூரை..
எங்கு சென்றாலும் உடன்வரும்..
இருக்கும் கூரையை
பிரிக்கமுடியா நிலையெனக்கு..
இன்னொரு கூரைக்கு
உறுதியென்ன...
வீசியெறிந்து
வீதியில் நடக்க உம்மிடமெதுவுமில்லை..
என் கரங்களிலிருப்பது
இரு பிஞ்சுகள்..
ஊழியமில்லாயுனக்கு
ஊறுவதைவிடவும்
குறைவென் ஊதியம்..
உம் கரங்கள் நீளுவதற்கு
யோசிப்பதில்லை..
நீளத் துடிக்குமென் கரங்களை
யாசிக்கிறேன்..
நாலெழுத்து படித்தவன் நான்..
நல்ல உடை தரித்தவன் நான்..
என் பிரதியாயிருக்கும்
பிச்சைக்காரரே...
அடுத்த முறையேனும்
கை நீட்டியென்னை
சங்கடத்தில் ஆழ்த்தாதீர்!!
Bookmarks