போன மாதம் ஊருக்குப்போய் இந்த மாதம் திரும்பி வந்தேன். இங்கிருந்து சென்னைக்கு நான் போய்வந்தது டெல்டா ஏர்லைன்ஸில். விமானப் பயணம் சவுகர்யமாகவே இருந்தது. போகும்போது அஜித் நடித்த "ஜி" படம் விமானத்தில் திரையிட்டார்கள். அறிவிப்புக்கள் தமிழிலும் சொல்லப்பட்டன. விமானப் பணிப்பெண்கள் தமிழிலும், டமிலிலும் பேசினார்கள், இரண்டுமே நன்றாக இருந்தது .
ஒரு விஷயத்தைக் கட்டாயம் இங்கே சொல்லியே ஆக வேண்டும். அடுத்த நாட்டிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் தமிழ் சகஜமாய் இருக்கும்போது, சென்னையிலிருந்து மதுரைக்குப் போகும் உள்நாட்டு விமானத்திலும் அதைவிட அதிகமாய்ப் புழக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. அதில் அறிவிப்புக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டில் மட்டுமே இருந்தன. அட.. சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் போகும் மக்கள் யாரும் தமிழ்பேசுபவர்கள் இல்லையோ என்று சந்தேகம்கூட வந்தது. இத்தனைக்கும் நான் வந்த விமானம் ஜெட் ஏர்வேஸ் என்ற தனியார் விமானம்தான். இதேபோன்ற ஏர்டெகான் உள்நாட்டு விமானத்திலும் இதே கதைதான். அவர்களுக்கு இதுபற்றி ஒரு வரி எழுதிப்போடலாம் என்று நினைத்தேன், இதுவரை எழுதவில்லை.
திரும்பி வரும்போது ஒரு சுவாரசியமான சம்பவம். டெல்டா விமானத்தில் நுழையும் முன்னர் பணிப்பெண்கள் பயணிகளிடம் புதிதாய் வாங்கிய பொருட்கள் பற்றி விசாரிக்கிறார்கள்.
என்னிடம் ஒரு பணிப்பெண் வந்து ஆங்கிலத்தில் ஆரம்பித்தார்.
"...நீங்கள் எதில் பேசுவீர்கள், தமிழா?, ஆங்கிலமா ?"
"..இரண்டும்..", இது நான்.
"..விமானநிலையத்தில் புதிதாய் இப்போது ஏதாவது வாங்கினீர்களா ?"
"..ஆமாம்.."
".... அதை நான் பார்க்கலாமா?, அதன் விலை என்ன?", கொஞ்சம் சீரியஸாகவே கேட்டார்.
"... விலை அதிகமில்லை, ஆனால் உங்களுக்கு அதை இப்போது உங்களிடம் காட்ட முடியாது..", நானும் சீரியஸாகவே.
இவன் கொஞ்சம் பிரச்சனை செய்யும் ஆளாக இருப்பான்போல என்று அவர் யூகிப்பதைப் பார்க்க முடிந்தது. அவர் ஏதும் பிரச்சனை செய்யும் முன்னர் நாமே சொல்லிவிடுவது நல்லது என்று நான் வாங்கியதைச் சொல்லிவிட்டேன். சொல்லி முடித்ததும் டக் என்று சிரித்து, விமானத்துக்குள் அனுப்பிவிட்டார்.
அந்தச் சிரிப்பில் இவன் சரியான குறும்புக்கார ஆள்தான் என்று நினைப்பது தெளிவாய்த் தெரிந்தது. அப்படி என்னதான் வாங்கினாய் என்று கேட்கிறீர்களா?. அதுதான் தலைப்பிலேயே இருக்கிறது. தலைப்பில் முதலில் இருப்பது இல்லை :-), இரண்டாவதாக, வெஜ் பர்கர். அதுவும் சாப்பிட்டு முடித்தபின்னர் யாரிடம் மீண்டும் காட்ட முடியும் ?, நீங்களே சொல்லுங்கள்.
Bookmarks