வங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் கன மழை
அக்டோபர் 10, 2005
சென்னை:
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
வங்கக் கடலில் தென்மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் மேகமூட்டமாக இருக்கும் என்றும் வானிலை இலாகா அறிவித்துள்ளது.
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் கன மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழகத்திற்கு அதிக மழை தரக்கூடிய வடகிழக்கு பருவமழை வரும் 20ம் தேதிக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி தட்ஸ்டமில் இணையம்
இலங்கையில் சூறாவளி ஏற்படும் அபாயம் சீரற்ற காலநிலை தொடர்ந்து நீடிக்கும்
இலங்கையில் சூறாவளி ஏற்படும் அபாயம் தென்படுவதாகவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த நிலைமை தோன்றியுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி காரியவசம் எச்சரித்துள்ளார்.
இடியுடன் கூடிய பலத்த மழையும் அதனைத் தொடர்ந்து மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் புயல் காற்றும் வீசும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பெய்து வரும் மழை மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கும் என்றும் கடலுக்கு செல்பவர்கள் முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்த 24 மணி நேரத்திற்குள் நாட்டில் கரையோர பகுதிகளில் கடும் காற்று மற்றும் மழையின் காரணமாக பல வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன் பாரிய மரங்களும் வீழ்ந்துள்ளன.
இதனால் சில இடங்களில் போக்குவரத்துத் தடைகள், மின் துண்டிப்பு ஆகியன இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக, பொலநறுவை, மொனராகலை, சிலாபம், மாதம்பை ஆகிய இடங்களில் மழை, காற்று காரணமாக வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துமுள்ளனர்
நன்றி தினக்குரல்
Bookmarks