ஜாதிகள் பெயர் சொல்லி
வேற்றுமை வேண்டாம்
என்று ஜாதித்தாளைக்
கிழித்ததில்தான்
பிறிதொரு நாள்
இட ஒதுக்கீட்டுப் பேரத்தில்
பொசுங்கிப் போனது எனது
பொறியியல் கனவு...
சரிகமபதநி யை விட
அம்மா தாயே குரல்
அடிவயிற்றைப் போட்டு
பிசைந்ததில்தான்
சங்கீதம் என்னை விட்டு
விலகிப் போய்
பிறிதொருநாள்
கச்சேரிகளில் ஆட்டு மந்தையாய்
உட்கார வேண்டியவனாகிவிட்டேன்..
தெலுங்குக் கீர்த்தனைகளை விட
செகுவேரா, பாப்லோ நெருடா
படிக்கப் போய்..
வீட்டிற்குள்ளேயே தனித்தீவாக்கப்பட்டு
பிறிதொரு நாள்
தனித்தட்டு போடப்பட்டு
நான் தொட்டது தீட்டானது...
சமுதாய ஏற்றத்தாழ்வு
சரி செய்யக் கிளம்பியதால்தான்
பிறிதொரு நாள்
என் எதிர்காலத்தில்
பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருப்பது
தெரியாமல்
அதில் விழுந்தேன்..
பிறிதொரு நாள்
இந்த முற்பகல்
செயல்களுக்கு எல்லாம்
பிற்பகலாய்
தலை ஆட்டிக் கொண்டே
சில விசும்பல்களுடன்
ஆட்டு மந்தைக் கூட்டத்தில்
சேர்ந்து விட்டேன்..
இன்னும் எனக்குள்
கோபம் பல உண்டு..
கற்பனையும் உண்டு..
எல்லாம்
ஊமை கண்ட கனவாய்...
Bookmarks