டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், காஷ்மீர், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வட இந்தியாவின் பல மாநிலங்களிலும் பாகிஸ்தானும் ஆப்கானிதானிலும் இன்று காலை மிகப் பெரும் பூகம்பம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவு கோளில் 7.4 என்ற அளவுக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று காலை 9.20க்கு ஏற்பட்ட இந்த அதிக சக்தி வாய்ந்த பூகம்பத்தால் நாட்டின் வட பகுதி குலுங்கியது.
இதில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
வீடுகள் பயங்கரமாக அதிர்ந்ததால் மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். பாகிஸ்தானிலும் ஆப்கானில்தானிலும் 9.00 மணியளவில் இந்த பயங்கரமான பூகம்பம் தாக்கியது. இந்த பூகம்பம் பாகிஸ்தான் முழுவதுமே உணரப்பட்டுள்ளது.
பூகம்பத்தின் மையம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முஸாபராபாத் நகரில் இருந்தது.
பல இடங்களில் பூகம்பம் 1 நிமிடம் முதல் பல நிமிடங்கள் வரை நீடித்தது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.
பாகிஸ்தானை இரண்டு முறை இந்த பூகம்பம் அடுத்தடுத்து குலுக்கியது. பாகிஸ்தான் நாடு முழுவதுமே இந்த நிலநடுக்கத்தால் குலுங்கியுள்ளது.
ஜம்மூவில் பல கட்டடங்கள் உடைந்து விழுந்துள்ளன. இந்த நிலநடுக்கத்தால் காஷ்மீரில் தொலைத் தொடர்பு, மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
இன்று காலையில் தாக்கிய மிக பயங்கரமான பூகம்பத்தால் ஜம்மூகாஷ்மீரில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இங்கு உயிர்ச் சேதம் மிக அதிகமான அளவில் இருக்கலாம் என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உதம்பூர் மாவட்டத்தில் வீடு இடிந்ததில் ஒருவர் பலியாகியுள்ளது உறுதியாகியுள்ளது. மற்ற உயிர்ச் சேத விவரங்கள் இன்னும் தெரியவில்லை. காஷ்மீரில் தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டவண்ணம் உள்ளது.
இந்த மிக சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் இமாயமலைத் தொடரே அதிர்ந்துள்ளது. காஷ்மீரின் ஊரி மாவட்டம் தான் மிகப் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. அங்கு பெரும்பாலான வீடுகள் இடிந்துவிட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்று உடனடியாகத் தெரியவில்லை. ஆனாலும் உயிர்ச் சேதம் மிக அதிகமாக இருக்கலாம் என்று தெரிகிறது. இங்கு பல இடங்களில் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.
இங்கு மீட்புப் பணியில் ராணுவம் இறக்கிவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
பல மலைக் குன்றுகளில் இருந்து பெரிய பாறைகள் உருண்டு விழுந்ததில் காஷ்மீரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள முஸாபராத்தில் தான் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டிய இந்திய எல்லைப் பகுதியில் தான் மிகப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எல்லையை ஒட்டிய 3 மாவட்டங்களுக்கும் ராணுவ மீட்புப் படைகள் விரைந்துள்ளன.
xxxxxxxxxxxxxxxxxxx
இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாகிஸ்தான் நாடே ஒட்டு மொத்தமாக அதிர்ந்துள்ளது. அதே போல ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளும் நில நடுக்கத்தால் குலுங்கின.
இஸ்லாமாபாத்தில் 19 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. இப் பகுதியைத் தாக்கிய நிலநடுக்கத்தின் அளவு 7.4 முதல் 7.6 வரை இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
ராவல்பிண்டியில் பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழுந்து குழந்தைகள் காயமடைந்தனர்.
பாகிஸ்தானால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தான் பெரும் உயிர்த் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் குவெட்டா, காபூல் உள்ளிட்ட நகர்கள் இந்த நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பங்க்ராமில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்துக்கு பெரும் சேதம் ஏற்பட்டபோதும் உயிரிழப்பு ஏதும் இல்லை.
நன்றி - thatstamil.com
Bookmarks