ஃபீனிக்ஸ் பறவை
மதுரையில் இருந்து வந்த ஜெயவிலாஸ் பேருந்து விளாத்திகுளத்துக்குள் நுழைந்ததுமே பிரத்யேகமாய் அடிக்கும் முந்திரி தோடு எரிந்த வாசனை மூக்கைத் துளைத்து தூக்கத்தை துரத்தியது. நன்றாக இழுத்து சுவாசித்தேன்.
சிறு வயதில் உடல் நிலை சரியில்லை யென்றால் மருத்துவரிடம் போக அப்பா என் கிராமத்தில் இருந்து இங்கு அழைத்து வருவார். அப்பொழுதில் இருந்தே எனக்கும் இந்த முந்திரித் தோடு எரிந்த வாசனைக்கும் சினேகம்.
அப்பா! தாத்தா பாட்டி வீட்டுக்குப் போக எவ்வளவு நேரம் ஆகும்?... என் மகள் மிர்ரா கேட்டாள்.
என் சொந்தக் கிராமத்திற்குச் செல்ல பேருந்து எப்பொழுது வரும் எனத் தெரியாதால் விசாரித்துச் சொல்கிறேன் என்றேன்.
விளாத்திகுளமும் நன்கு பரிச்சயமான ஊர்தான் என்றாலும் நான் ஊரை விட்டுச் சென்று 10 ஆண்டுகள் ஆகி விட்டதால் ஊரின் அமைப்பு மாறிப் போயிருந்ததில் ஒன்றும் பிடிபடவில்லை.என் ஊர் செல்லும் பேருந்து வந்ததும் ஏறி அமர்ந்து கொண்டோம்.
பாரதி ராஜாவின் படங்களில் வரும் வாய் பிளந்து கிடக்கும் கரிசக்காடுதான் என் ஊர்ப்பக்கம். அவர் சொல்கின்ற படியே "நாளை மழை பெய்யும்" என்ற நம்பிக்கைதான் வாழ்க்கையாய் வாழும் மனிதர்கள் உள்ள பூமி! அந்தக் கரடு முரடான சாலையில் ஓட்டுனரின் அதி திறமையால் மட்டுமே 18 கி.மீ தூரம் உள்ள என் ஊரை 1 மணி நேரத்தில் சென்றடைய முடியும்.
சிறு வயது நினைவுகள் வந்து எனை அவ்வப்பொழுது தாலாட்டுவதுண்டு. ஆனால் இன்று என் மகளோடு நானும் குழந்தையாகிக் குதூகலித்துக் கொண்டிருந்தேன்.என் முக மாறுதல்கள் கண்ட என் மனைவி என்னை வியப்போடு பார்த்ததில் எனக்கு அசாதாரணமாகத் தோன்றவில்லை.பாவம் அவளுக்கு என் மனதின் ஓட்டங்கள் புரிந்திருக்க வாய்ப்பில்லை.
என்னங்க ஊர் வந்திட்டது என எழுப்பினாள் என் மனைவி.
பேருந்து விட்டு இறங்கியதும் அப்பாவைத் தேடினேன். கூட ஒரு வாலிபனை அழைத்து வந்திருந்தார். எங்கள் சுமைகளை வாங்கிக் கொள்ளவாம்.சரி யென்று அவனிடம் கொடுத்து விட்டு அவன் பெயர் கேட்டென். முத்துவேல் என்றான்.மிர்ராவை அப்பா தூக்கிக் கொண்டே எங்களை வரவேற்றார். ஊரின் மாற்றங்களைக் கவனித்தேன். புதிது புதிதாக டிஷ் ஆண்டனாக்கள் வீடுகளில் முளைத்து இருந்தன. கண்மாய் ஓரமாய் ஒரு பெரிய தண்ணீர்த் தேக்கத் தொட்டி "சீவலப் பேரிக் கூட்டுக் குடி நீர்த் திட்டம்" என்ற பெயருடன் நின்றிருந்தது. கூரை வீடுகள் ஒன்று கூட இல்லை.
தெருக்கள் சிமெண்ட் பூச்சுத்தரையாய் இருந்தன. வீடுகள் கூட மாறிப் போயிருந்தன. சித்தப்பா, மாமா, அத்தை என எல்லோரையும் பற்றி விசாரித்துக் கொண்டே வந்தேன்.
நம்ம ஊரு இப்போ ரொம்ப மாறிடுச்சு போலத் தெரியுது மாமா என ஆச்சர்யப் பட்டுக்கொண்டே கேட்டாள் என் மனைவி.
ஆமாம்மா! முன்ன விட இப்பொ நிறைய வசதிகள் வந்திட்டது என்றார் அப்பா.
வரும் வழி நெடுக விசாரிப்புகள். எப்போ வந்தே? இப்பொழுதுதான் பேருந்தில் இருந்து இறங்கி வந்ததைப் பார்த்தாலும் "நல்லா இருக்கியா?" என்பதன் மாற்றாக எங்கள் ஊரில் வழங்கப் படும் ஒரு சொற்றொடர்.
எப்போ வந்தீன்னு ஒரு வார்த்தை கேக்கக் காணமத்தா! என்று பெரும் பாலான பெண்கள் வேறு ஊர் செல்லும் போது உறவினர்கள் தங்களைக் கண்டு கொள்ளாமை பற்றி அங்கலாய்த்துக் கொள்வார்கள்.
இப்போதான், என அனைவருக்கும் பதில் கூறிக் கொண்டே வந்தேன். ஊர் சிறிய ஊர் என்பதால் அனைவரும் முறை வைத்து அழைப்பது வழக்கம். அதனால் கூப்பிடுபவருக்குத் தகுந்தாற் போல இப்போதான் அத்தை, இப்போதான் மாமா, பெரியம்மா எனக் கூறிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.
வீடு வந்ததும் ஆரத்தழுவி அம்மா வரவேற்றாள் மருமகளையுந்தான்.அவர்கள் இருவரும் தூரமாக இருப்பதாலோ என்னவோ என் மனைவிக்கும் , அம்மாவிற்கும் இடையில் மாமியார் மருமகள் சண்டை வந்ததே இல்லை.அதோடு மட்டுமில்லாமல் என் மனைவி மிகச் சாந்தமானவளுங்கூட.
குளித்து சாப்பிட்டவுடன் ஊரைச் சுற்றிப் பார்க்கலாம் என முத்து வேலுவை அழைத்தேன்.
மிர்ரா அப்பா நானும் வருவேன் எனத் தொற்றிக் கொண்டாள். முத்துவேலுவுடன் கண்மாய்க் கரைக்குச் செல்லும் வழியில் இன்னும் பல விசாரிப்புகள்.
ஆளே மாறிப் போயிட்டேயப்பா எனவும், அவங்க தாத்தா போல நல்லா ஓங்கு தாங்கா வளர்ந்திருக்கான் என்றும் பல விமர்சனங்கள். ஊரின் மாற்றங்கள் இன்னும் பிரமிக்க வைக்கக்கூடிய அளவில் இருந்தது. சந்தோஷப் பட்டுக்கொண்டேன்.
என்ன படிச்சிருக்கே முத்துவேல் என்றேன்.
பத்தாவதுங்க! அதுக்கப்புறம் ஆத்தா பள்ளியூடம் போதுன்னுருச்சி, அதான் உங்கப்பாருகிட்ட வேலைக்குச் சேந்துகிட்டேன் என்றான்.
கண்மாய்க் கரையின் பட்டாம் பூச்சிகளைக் கண்டதும் மிர்ராவின் குதூகலத்திற்கு அளவேயில்லாமல் இருந்தது. முத்துவேல் அவற்றைப் பிடித்துக் கொடுத்தான். மிர்ராவுக்கு இது போதாதா நன்கு ஒட்டிக் கொண்டாள்.
நீண்ட நாள் கழித்து ஊரைப் பார்த்ததில் மனது நிறைந்திருந்தது. இங்கேயே தங்கி விட மனது துடித்தது. வீடு திரும்பினால் சிறு கூட்டம் ஒன்று. எல்லாம் உறவினர் தான்.
என்ன தம்பி ஊரெல்லாம் எப்படி இருக்கு என்று அன்போடு விசாரித்தனர்.
இங்கேயே தங்கலாம்னு இருக்கேன் எனச் சொன்னதும் அம்மாவிற்குச் சந்தோஷம்.
என் மனைவி குழப்பத்துடன் பார்த்தாள்.
வந்திருந்த கூட்டத்தில் மிர்ரா வயதை விட ஒரு 2 வருடம் மூத்த பருவமுடைய பையன் ஒருவனும் இருந்தான்.
டே சுரேஷ்! பாப்பாவைச் சேர்த்து கிட்டு விளையாடப் போங்க என அப்பா அந்த சிறுவனிடம் கூறினார். மிர்ராவும் அவனுடன் விளையாடச் சென்றாள்.
என்ன இது கையில என்றான்.
இதூ ப்பட்டாம் பூச்சி! முத்துவேல் மாமா பிடிச்சிக் கொடுத்தாங்க என்றாள் மிர்ரா.
எந்த முத்துவேல் மாமா -இது சுரேஷ் அந்த சிறுவன் தான்
அதோ அங்க இருக்காரே! அவருதான் என முத்து வேலுவைக் காட்டினாள்.
அதைக் கேட்ட சுரேஷோ சிரிக்க ஆரம்பித்து அது முத்து வேலு; முத்து வேல் மாமா எல்லாம் இல்லை என்றான்.
அய்யோ வயசில மூத்தவங்களை மாமான்னுதான் சொல்லனும்னு எங்கப்பா சொல்லி இருக்காங்க- மிர்ரா
அவனை எல்லாம் மாமானு சொல்லக் கூடாதுனு எங்கப்பா சொல்லி இருக்காங்க ஏன்னா அவன் கீழ் சாதி என்றவன் ஏ! முத்து வேலு என்றான்.
சுரேஷின் சத்தம் கேட்டு என்னங்க கூப்பிட்டீங்களா ? என்று ஓடோடி வந்தான் அந்த 20 வயது வாலிபன்.
பார்த்துக் கொண்டிருந்த எனக்கு பேரதிர்ச்சியாகப் போய் விட்டது.
எல்லோரும் போன பின் என் மனைவியப் பார்த்து நாளை ஊருக்குக் கிளம்புகிறோம் எடுத்து வை என்றேன்.இப்பொழுதும் குழப்பத்துடனேயே பார்த்தாள் என் மனைவி.
அம்மாவும் கூட ஏண்டா என்றாள்.
பல அறிவியல் மாற்றங்கள் வந்தும், பல அறிஞர்கள், பண்பாளர்கள் எனப் பலருங் கூடி அழிக்க முற்பட்ட சாதி மட்டும் இன்னும் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டும் மீண்டும் எழுவதை எப்படிப் புரிய வைப்பேன் எனக் குழப்பத்தில் இருந்தேன்.
சாதின்னா என்ன தாத்தா? ஏன் முத்து வேல் மாமாவை மாமானு சொல்லக் கூடாதுன்னு மிர்ரா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாவிட்டாலும் நான் இந்த ஊரில் இருந்தால் மிர்ரா எதிர் நோக்கப் போகும் பயங்கரம் அறிந்து எனது மாற்றத்திற்கான காரணம் புரிந்து எங்கள் பயணத்திற்கான் ஆயத்த வேலைக்குத் தயாரானார். அம்மாவும் தான். என் மனைவி மட்டும் வழக்கம் போல குழம்பிக் கொண்டே என் தோளில் வந்து சாய்ந்தாள்.
இது எனது முதற் சிறு கதை! எனவே தவறாமல் சீர் தூக்கிப் பார்த்து தங்களின் விமர்சனங்களைப் பதிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
முகிலன்.
Bookmarks