சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை
என் ஆருயிர் நண்பருக்கு சமர்ப்பணம்!
எரியும் கண்ணை சிமிட்டும் ஓசையிலே
என் சோர்வு அறிவாய்-
' மீதி நாளைக்கு பாத்துக்கலாம் '
இரையும் வயிறு போடும் இக்கட்டான இசையிலே
என் பசி அறிவாய் -
' உனக்கும் சேத்துதாண்டா கொண்டாந்திருக்கேன் '
தொலைபேசும் குரல் கம்மலிலே
காய்ச்சல் அறிவாய் -
' கஞ்சியும் மாத்திரையும் குடுத்து உட்டாங்க சார்"
உன் பேர் சொல்வதில் ஒருமாற்று குறைந்தால்
வருத்தமான மனசு அறிவாய் -
' என்ன, நேத்து வர்லன்னுதான அய்யா அப்செட்? '
ஊழல், லஞ்சம், ஜாதி, வறுமை - பேச என் நாசி துடிக்கையில்
ஊமைக்கோபம் அறிவாய் -
' உன்னால முடிஞ்ச வரைக்கும் இதை மாத்துவடா , பொறு '
சொல்லாமலே எல்லாமும் புரிந்தவள் நீ
அதையும் சொல்லாமலே இருந்திருக்கலாம் நான்!
Bookmarks