டீசல் விலை 45 பைசா உயர்வு
டீசல் விலை 45 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
லட்சத்தீவு அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை: தென் தமிழகத்தில் மழை வாய்ப்பு
லட்சத்தீவு கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென்தமிழகத்தின் ஒரு சில இடங்களில் சனிக்கிழமையன்று (மார்ச் 23) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராஜபக்சே உருவ பொம்மையை எரித்தவர் உடல் கருகினார்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பஸ் நிலையம் அருகே, இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச குற்றவாளியாக அறிவித்து, பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வாகன ஓட்டுனர்கள் மற்றும் அனைத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 22.03.2013 வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பஸ் நிலையத்தின் அருகே நடுரோட்டில் ராஜபக்சேவின் உருவ பொம்மையை போட்டு, அதன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து, ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது போராட்டத்தில் கலந்து கொண்ட கந்தர்வகோட்டை அருகே உள்ள கொத்தகப்பட்டியை சேர்ந்த லோடு ஆட்டோ டிரைவர் ஆனந்த் (வயது 23) எரிந்து கொண்டிருந்த ராஜபக்சேவின் உருவ பொம்மையை காலால் உதைத்தார்.
அப்போது திடீரென ஆனந்தின் உடையில் தீப்பற்றியது. சட்டையில் பற்றிய தீ உடலிலும் வேகமாக பரவியது. இதனால் வலி தாங்க முடியாத நிலையிலும், ராஜபக்சே ஒழிக என்றும், மத்திய அரசை கண்டித்தும் சத்தம் போட்டவாறு அப்பகுதி சாலையில் ஆனந்த் ஓடினார்.
அந்த பகுதியில் இருந்தவர்கள் இதைப்பார்த்து ஆனந்தின் உடல் மீது மண்ணை அள்ளிப்போட்டும், பழைய சாக்கை கொண்டு அடித்தும் தீயை அணைக்க முயன்றனர். சிறிது நேரத்திற்கு பின்னர் ஆனந்தின் உடலில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் ஆனந்திற்கு முதுகு உள்ளிட்ட பகுதியில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி செய்யப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக ஆனந்த் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்!
சாதிப்பதற்கு உடலின் ஊனம் தடையில்லை என மன தெம்புடன் தன்னை நிரூபித்து முன்மாதிரியாக திகழ்கிறார் ஒரு ஏழை மாணவர்.
சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.75 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனை படைத்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பெரிய வடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் - சரோஜா தம்பதியினரின் மகன் மாரியப்பன் (18). மாற்றுத்திறனாளி. அப்பா தங்கவேல் சிறுவயதிலேயே காலமாகிவிட்டார். தாயார் சரோஜா, செங்கல் சூளை வேலைக்குச் சென்று மாரியப்பன், அவரது இரு தம்பிகள், அக்கா ஆகியோரை காப்பாற்றி வருகிறார்.
மாரியப்பன், பெரிய வடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 கணினிஅறிவியல் பிரிவு எடுத்து பயின்று வருகிறார். வலது கால் பாதிக்கப்பட்ட இவர், 6-ம் வகுப்பு முதல் உயரம் தாண்டுதல் போட்டியில் ஆர்வம் கொண்டு விளையாடத் தொடங்கினார். வறுமை வயிற்றுக்கு பிரச்சனை தரலாம் தனது கால்களுக்கு இல்லை என ஆர்வமாக விளையாட தொடங்கியவர் மாரியப்பன்.
சிறப்பு விசயம் என்னவென்றால் மாவட்ட அளவில் பொதுப்பிரிவு(கால்கள் நன்றாக உள்ளவர்கள் உட்பட்ட) மாணவர்களுக்கான போட்டியில் பங்கேற்று 4 முறை முதல் பரிசை வென்றுள்ளார்.
இதையடுத்து, கடந்த 2012-ம் ஆண்டு பெங்களூரில் இந்திய பாரலிம்பிக் கமிட்டியின் மூலம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போட்டியில் கலந்து கொண்ட மாரியப்பன், 1.72 மீட்டர் உயரம் தாண்டி முதல் பரிசை வென்றார்.
இதையடுத்து, கடந்த 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு மாரியப்பனுக்கு கிடைத்தது. ஆனால், குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக வெளிநாடு செல்வதற்கு பாஸ்ப்போர்ட் எடுக்கக் கூட பணம் இல்லாததால் அவரால் செல்ல முடியவில்லை.
இதனால், பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நாகராஜ் என்ற மாற்றுத்திறனாளி மாணவர் லண்டன் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். அந்த லண்டன் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.74 மீட்டர் தாண்டியவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மார்ச் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை பெங்களூரில் இந்திய பாரலிம்பிக் கமிட்டி நடத்திய தேசிய அளவிலான பாரலிம்பிக் போட்டியில் சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் மாரியப்பன் மீண்டும் கலந்து கொண்டார். இப்போட்டியில், 1.75 மீட்டர் உயரம் தாண்டி முதல் பரிசை வென்றார்.இது இந்த பிரிவில் உலக சாதனை.
இதையடுத்து, கோப்பையையும், தங்கப்பதக்கத்தையும் எடுத்துக் கொண்டு ஆட்சியரைச் சந்திக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு பள்ளியின் உடல் கல்வி ஆசிரியர் ஆர்.ராஜேந்திரனுடன் வெள்ளிக்கிழமை வந்தார். ஆனால், ஆட்சியர் இல்லாததால் அவரைச் சந்திக்க முடியவில்லை.
அப்போது, மாரியப்பன் கூறியது: உயரம் தாண்டுதல் போட்டியில் ஆர்வம் கொண்டு விளையாடத் தொடங்கிய போது எனக்கு ஊக்கம் அளித்து பயிற்சி அளித்தவர் எங்கள் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஆர்.ராஜேந்திரன்.
லண்டனில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தும் பாஸ்போர்ட் எடுக்க பணத்தை தயார் செய்ய முடியவில்லை. இதனால், அப்போட்டியில் பங்கேற்க முடியவில்லை.
பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 1.75 மீட்டர் உயரம் தாண்டியுள்ளேன். இதுவே, தேசிய அளவிலும், உலக அளவிலும் முதல் பதிவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, வரும் ஜூன் மாதம் பிரான்ஸில் நடைபெற உள்ள உலக அளவிலான பாரலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில், பங்கேற்க உள்ளேன்.
எனது தாயார், செங்கல் சூளை வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வருகிறார். மிகக் குறைந்த அவரது வருமானத்தைக் கொண்டு எங்களது குடும்பம் பிழைத்து வருகிறது.
விளையாட்டுப் போட்டியில் உலக அளவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், குடும்பத்தின் பொருளாதாரம் காரணமாக பின்னடைவு ஏற்படுகிறது.
ப்ளஸ் 2 முடிக்க உள்ள நான், மேல்படிப்புச் செலவிற்கு என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளேன். விளையாட்டில் பங்கேற்பதற்கும், மேல்ப்படிப்புக்கும் உதவியை எதிர்பார்த்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.
சாதிக்க வறுமையும்,ஊனமும் தடையில்லை என போராடி நிருபித்துள்ளார்.
தூத்துக்குடியில் விஷவாயு கசிவா? : மக்களுக்கு மூச்சுத்திணறல்; அவதி
தூத்துக்குடியில் இன்று காலை 7 மணி அளவில் அங்கிருந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், சுவாசக் கோளாறு, கண் எரிச்சல், ஒவ்வாமை ஆகியன ஏற்பட்டன. ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்களுக்கு ஏற்பட்ட இந்தத் திடீர் தொந்தரவால், பொதுமக்களிடம் பீதி ஏற்பட்டது. ஆலையில் இருந்து விஷவாயு கசிந்துள்ளதாக ஏற்பட்ட தகவலை அடுத்து பொதுமக்கள் பெரிதும் பரபரப்படைந்தனர். இருப்பினும், எவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லவில்லை. ஆனால், அருகில் உள்ள மருத்துவமனையில் இருந்த நோயாளிகளும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து ஸ்டெர்லைட் ஆலையிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, தங்கள் ஆலையில் இருந்து அப்படி எதுவும் வாயுக் கசிவு இல்லை என்று உறுதிபடத் தெரிவித்தனர்.
ஆனால், அருகில் உள்ள தனியார் ஆலைகளில் இருந்துதான் விஷ வாயுக் கசிவு இருந்திருக்கக் கூடும் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
மூச்சுத்திணறல் உள்ளிட்ட இந்தத் தொல்லைகள் அடுத்த ஒரு மணி நேரத்தில் சரியானதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
தபால் நிலையத்துக்குள் புகுந்து பூட்டு போட்டு போராட்டம் நடத்திய நாம்தமிழர் கட்சியினர் 16 பேர் கைது
சிதம்பரம் தலைமை தபால் நிலையத்துக்குள் சென்று கதவைத் தாழிட்டு, உள்ளே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராஜபட்சவை போர்க்குற்றவாளி என்று அறிவித்து, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் திருத்தத்தை இந்தியா கொண்டுவராததைக் கண்டித்து, கோஷம் எழுப்பிய மாவட்டச் செயலர் புகழேந்தி தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் 16 பேர் சிதம்பரம் தலைமைத் தபால் நிலையத்துக்குள் புகுந்து கொண்டு முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அவர்களை முருகானந்தம் தலைமையில் சென்ற போலீஸார் கைது செய்தனர்.
மான் வேட்டை: பிரபல நடிகர், நடிகைகள் மீது வழக்கு பதிவு: 6 வருட சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு என தகவல்
ராஜஸ்தானில் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு பாதுகாக்கப்பட்ட உயிரினமான மான்கள் வேட்டையாடியது தொடர்பான வழக்கில் இந்தி நடிகரும், முன்னாள் கிரிக்கெட் வீரர் பட்டோடியின் மகனுமான சயீப் அலி கான், நடிகர் சல்மான் கான், நடிகைகள் தபு, நீலம் மற்றும் சோனாலி பிந்த்ரே ஆகியோர் மீது இன்று புதிதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக ஜோத்பூர் நீதிமன்றம் இன்று கூறியுள்ளது.
சல்மான் கான் மீது ஆயுத சட்டம் தொடர்பான வழக்கு கைவிடப்பட்டது. தற்போது, சல்மான் கானை வேட்டையாடிய தூண்டியதாகவும், சட்டத்திற்கு புறம்பாக ஈடுபட்டதாகவும் பிற நடிகர், நடிகைகள் மீதும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கில் குற்றவாளி என நிரூபணமானால் 6 வருடம் சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.
நியூசிலாந்தில் நிலநடுக்கத்தினால் தண்ணீர் தங்கமாகிறதாம்... ஆய்வில் தகவல்!
நியூசிலாந்து: நிலநடுக்கத்தால் பூமிக்கு அடியில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்படும் என்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நியூசிலாந்து நாட்டில் நிலத்தடியில் இருக்கும் நீர் தங்கமாக மாறுவதாக ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்து பல்கலைகழக புவியியல் துறையின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பூமியில் நிலநடுக்கத்தால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நடைபெற்ற இந்த ஆய்வில் ஒவ்வொரு முறை நிலநடுக்கம் ஏற்படும் போதும் நீர் மூலக்கூறுகள் தங்கமாக மாற்றமடைவது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும் இந்த ஆய்வில்,"நிலநடுக்கத்தால், பூமியின் அடிப்பகுதியில் உள்ள நீர், அதிக அழுத்தத்திற்கு உட்படுகிறது.
இதனால் நீர் மூலக்கூறுகள் இரசாயன மாற்றத்திற்கு உள்ளாகின்றன. இந்த மாற்றம் பூமியின் மத்திய பகுதியில் நிலவும் அதிக வெப்பத்தின் காரணமாக மேலும் சில மூலகங்களுடன் இரசாயனமாற்றத்திற்கு உள்ளாகின்றன. இதனால் பல மாற்றங்களுக்கு பின் நீரானது தங்கமாக மாறுகிறது. என்று கூறியுள்ளனர்.
சாதாரணமாக இந்நிகழ்வு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் நடைபெறுகிறது.ஆனால் நியூசிலாந்தில் நிலவும் சாதகமான தட்ப வெட்ப நிலையின் காரணமாக வெகு விரைவிலேயே இந்த மாற்றம் நிகழ்கிறது. சில நூறு ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்தில் ஏராளமான தங்க சுரங்கங்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளன"என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருபிரிவினர் மோதல்: ராமேஸ்வரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, 60 பேர் கைது! பதற்றம்
ராமேஸ்வரத்தில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடைபெற்றது. இதில் 60 பேர் கைது செய்யப்பட்டனர் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நீடிக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 22.03.2013 வெள்ளிக்கிழமை மாலை ரமேஸ்வரம் கோவிலுக்கு பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக இரண்டு ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது கைகலப்பில் முடிந்து மோதலாக வெடித்தது.
ஆட்டோ டிரைவர் செந்தில் மற்றும் விக்கி ஆகியோர் இடையே ஏற்பட்ட மோதல் இரு பிரிவினரிடையேயான மோதலாக மாறியது. இதில், பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. அருகில் இருந்த கடைகளுக்கு தீவைக்கப்பட்டன. இதனால் எழுந்த பதற்றமான சூழ்நிலையால் அங்கே போலீஸார் குவிக்கப்பட்டனர். வன்முறை சம்பவம் நடந்த இடங்களை போலீஸ் டிஐஜி ராமசுப்பிரமணியன் பார்வையிட்டார்.
இதனைக் கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை இடப்பட்டது. இந்நிலையில், இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
மு.க. அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு… தமிழக அரசு உத்தரவு
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு மதுரை போலீஸ் கமிஷனருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கை தமிழர் பிரச்னைக்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க., வெளியேறியது. அழகிரி உட்பட 5 மத்திய அமைச்சர்கள், தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தனர். அதையடுத்து, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பும் விலக்கி கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரிக்கு மட்டும் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு, மதுரை போலீஸ் கமிஷனருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அழகிரி வீட்டில் வழக்கம் போல் 4 போலீசார், சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அழகிரியுடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் பாதுகாப்பு போலீசார் உடன்செல்வர்.
"எதற்காக அழகிரிக்கு பாதுகாப்பு தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்ற விபரம் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. தற்போது, தி.மு.க.வில் அழகிரி - ஸ்டாலின் ஆதரவாளர்கள் இடையே மறைமுகமான மோதல் இருப்பதால், அழகிரியின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை அரசு எடுத்திருக்கலாம்" என்று மதுரையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.
There are currently 2 users browsing this thread. (0 members and 2 guests)
Bookmarks