மம்தாவின் இலங்கை ஆதரவு பேச்சு: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் மீது தாக்குதல்-சூறை
புதுச்சேரி: இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த ஐ.நா. தீர்மானத்துக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தை தமிழ் அமைப்புகள் தாக்கி சூறையாடின.
இலங்கை நட்பு நாடு என்பதால், அந்நாட்டு எதிராக தீர்மானம் கொண்டு வரக்கூடாது என்று மம்தா பானர்ஜி திருவாய் மலர்ந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ் அமைப்பினர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆகியோர் அரவிந்தர் ஆசிரமம் முன்பு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். திடீரென அவர்கள் ஆசிரமத்துக்குள் புகுந்து அங்கிருந்த பூத் தொட்டிகளை அடித்து நொறுக்கினர். மேலும அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த கண்ணாடி ஜன்னல்கள், அலுவலக பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர்.
ஆசிரமத்தையும் கல்வீசி தாக்கினார்கள். இதனால் அந்த பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டனர். மம்தாவை கண்டிக்க பல வழிகள் இருக்கும் நிலையில், ஆசிரமம் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்க செயலே.
Bookmarks