கோவை, ஜுன் 25-
ஜெர்மன் நாட்டில் 300 ஆண்டுகளுக்கு மேலாகியும் தமிழ்ப்பற்றும், கலாசாரமும் குறையவில்லை என்று ஆய்வரங்கத்தில் பெண் அறிஞர் பேசினார்.
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் 2-வது நாள் நிகழ்ச்சியாக நேற்று நடைபெற்ற ஆய்வரங்கத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவரும், தற்போது ஹாங்காங்கில் வசிப்பவருமான கிரிகோரி ஜேம்ஸ் பேசியதாவது:-
தமிழின் தொன்மை
தமிழ் சுவடிகளை பார்ப்பதற்காக 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு சென்றேன். அப்போது அங்கிருந்த நூலகர், இதற்கு முன்பு இந்த நூலகத்திற்கு எப்போது வந்தீர்கள் என்று கேட்டார். 40 ஆண்டுகளுக்கு முன்பு முதுகலை பட்டப்படிப்பு படித்தபோது வந்தேன் என்று சொன்னேன்.
உடனே அவர் பழைய அலமாரி ஒன்றைத் திறந்து, எனது 23-வது வயதில் நான் கொடுத்த விண்ணப்பபடிவம் ஒன்றை எடுத்து வந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்பு நான் கொடுத்த விண்ணப்ப படிவத்தை இன்னமும் வைத்திருக்கிறீர்களே என்று ஆச்சரியமாக கேட்டேன். அதற்கு அந்த நூலகர் கூறும்போது, ``பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த தொன்மையான தமிழ் தொடர்பானவற்றை பத்திரமாக வைத்திருக்கும்போது உங்கள் விண்ணப்பத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது பெரிய வேலை அல்ல'' என்று தமிழின் பெருமையை கூறினார்.
இவ்வாறு கிரிகோரி ஜேம்ஸ் பேசினார்.
தமிழ்நாடு எனக்கு புகுந்த வீடு
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அறிஞர் உல்ரிக் நிக்லாஸ் பேசியதாவது:-
நீண்டகாலத்திற்கு பிறகு தொன்மையான, பழமையான தமிழ் மொழிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதியின் முயற்சியால் செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளது. இதன்மூலம் தமிழ் அன்னைக்கு மேலும் ஒரு ஆபரணம் அணிவிக்கப்பட்டு இருக்கிறது. ஜெர்மன் நாட்டுக்கும், தமிழ்நாட்டுக்கும் நீண்டகால தொடர்பு உள்ளது.
ஜெர்மன் நாட்டில் 300 ஆண்டுகளுக்கு மேலாகியும் தமிழ்ப்பற்று, கலாசாரம் குறையவில்லை. தமிழ்நாட்டுக்கு வெளியே ஜெர்மனியில்தான் மிகப்பெரிய தமிழ் நூலகம் உள்ளது. அங்கு 56 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. அங்கு தமிழ்தாய்க்கு ஒரு வசிப்பிடம் கட்ட முயற்சித்து வருகிறோம்.
இங்கு நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுடன், 9-வது தமிழ் இணைய மாநாடும் நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்-அமைச்சர் கருணாநிதியின் முயற்சியால், நவீன கணினி உலகில் தமிழ் இணையும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜெர்மனி எனக்கு பிறந்த வீடு என்றால், தமிழ்நாடு எனக்கு புகுந்த வீடு. சங்கம் வளர்த்த மதுரையில் மருமகளாக இருக்கிறேன். தமிழ்த்தாயின் வளர்ப்பு மகளாக கருதி வாழ்ந்து வருகிறேன். எனக்கும், என்னைப் போன்ற வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களுக்கும் வழிகாட்டியாக இருந்த டி.வி.கோபால அய்யர், டி.எஸ்.கங்காதரன், டி.சுப்பிரமணியன் ஆகியோருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு உல்ரிக் நிக்லாஸ் பேசினார்.
கான்பூர் ஐ.ஐ.டி. தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் வாழ்த்தி பேசும்போது கூறியதாவது:-
கணினி மொழியியல் மையம்
தமிழ் இலக்கியமும், இணையமும் இணைந்து செயல்படும் இந்த மாநாடு ஒரு பெரும் திருப்புமுனையாகும். தமிழ் இணைய மாநாடு நடத்தும் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு உத்தமம் அமைப்பு சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் இணையத்தைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் பல மைல் கண்டு முன்னேறியுள்ளோம். சில மைல்களை கடக்க தவறிவிட்டோம். தமிழ் இணைய மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகள் மூலம் இணையதள தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், எதிர்நோக்கும் சவால்களுக்கும் நாம் ஈடுகொடுக்க முடியும். பள்ளிகள் முதல் பல்கலைக்கழகம் வரை தமிழ் இணையம் பிரபலமாகியுள்ளது. மேலும் பல சாதனைகளை படைப்பதற்காக சென்னை பல்கலைக்கழகத்தில் கணினி மொழியியல் மையம் தொடங்க வேண்டும்.
அதுபோல கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் சுயமொழிபெயர்ப்பு மற்றும் தேடு பொறிக்கான மையம் தொடங்க வேண்டும். மற்ற கல்வி நிறுவனங்களில் கணினி தொழில்நுட்பத்தை கற்கும் முறைகள், தகவல் சேகரிப்பு தொகுப்பு மையம், எழுத்தறிவு கருவிகள் உள்பட 7 விதமான துறைகளை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு மையத்திற்கும் ரூ.10 கோடி தேவைப்படும். கணினி தமிழ் வளர்ச்சிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி, நிதி அமைச்சர் அன்பழகன், மத்திய மந்திரி ஆ.ராசா ஆகியோர் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் சாதனை
உலகத்தமிழ் ஆய்வு கழகத்தின் துணைத்தலைவர் வா.செ.குழந்தைசாமி பேசியதாவது:-
மனித சமூகம் தொடங்கிய காலத்தில் இருந்து 6 நாகரிகங்கள் அடையாளம் காணப்பட்டன. அதில் 4 அடையாளம் தெரியாமல் மறைந்துவிட்டன. இப்போது அந்த மொழிகளும், மக்களும் இல்லை. சீன நாகரிகம், இந்திய நாகரிகம் மட்டுமே உள்ளன. இந்திய நாகரிகம் என்றால் அது, வடமொழி, தமிழ் ஆகியவற்றை குறிக்கும். இவை இரண்டும் வழக்கு மொழிகளாக இருந்து வருகின்றன. இந்த தகவல்கள் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டும். இந்திய நாகரிகத்தின் அடிப்படை சமஸ்கிருதமும், திராவிடமும் என்று சி.பி.ராமசாமி அய்யர் கூறியுள்ளார். அந்த அடிப்படையை வரலாறு, சமுதாயவியல், உலகளவில் இடம்பெறச் செய்ய வேண்டும். இது நமது முக்கிய கடமை ஆகும். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்ததும் நான் எழுதிய கட்டுரையில், தமிழும், வடமொழியும் இந்திய பண்பாட்டுத் தூண்கள் என்று எழுதினேன். தமிழின் சாதனை மிகப்பெரியது. அதனை புதிய யுகத்தில் நிலைநிறுத்த வேண்டும். தமிழ் இன்னமும் நிறைய வெற்றிகளைப் பெற வேண்டியுள்ளது.
இவ்வாறு வா.செ.குழந்தைசாமி பேசினார்.
.....தினத்தந்தி 25.06.2010
Bookmarks