மருத்துவக் கல்லூரியில் புதிய ஆண்டு துவக்கம். அனைத்து புது மாணவர்களும் அவர்களது முதல் உடல் கூறு வகுப்பிற்காக பிரேத பரிசோதனை அறையில் குழுமி இருந்தனர். ஒவ்வொருவருக்கும் அளவிட முடியாத பதற்றமும், எல்லாம் ஒழுங்காக கற்றுக் கொள்ள வேண்டுமே என்ற ஆர்வமும். பேராசிரியர் வந்து 'வணக்கம் எனதினிய மாணவர்களே! தங்கள் அனைவரையும் இந்த மருத்துவ கல்லூரியின் முதல் உடல் கூற்றாய்வு வகுப்பிற்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இந்த பரிசோதனை சாலையில் முதல் பாடம் அருவெறுப்பு ஏதுமின்றி இருக்கப் பழகுவது. ஒரு எடுத்துக் காட்டாக இதோ இங்கே இருக்கும் பிரேதத்தை நான் தொட்டு திருப்பி இதோ உள்ள கெட்ட உடல் திசுவை என் விரலால் தொட்டு.....' என்றபடி தன் ஒரு விரலால் பிரேதத்தை தொட்டு சட்டென தன் கையை எடுத்து வாயில் வைத்துக் கொண்டார். பார்த்துக் கொண்டிருந்த சில மாணவர்களுக்கு அருவெருப்பில் வாந்தியே வந்து விட்டது. 'சரி. எங்கே இப்போது நீங்கள் எல்லாம் இதே போல செய்யுங்கள். பார்க்கலாம்' என்றார். சில மாணவர்கள் தயங்கி நின்றாலும் ஆர்வக் கோளாறினால் ஒரு சிலர் மனதை திடப்படுத்திக் கொண்டு பேராசிரியர் போலவே பிரேதத்தை தொட்டு தங்கள் வாயில் கை வைக்கப் போக, 'நிறுத்துங்கள். உங்கள் ஆர்வத்தை பாராட்டுகிறேன். ஆனால் நீங்கள் அனைவரும் ஒரு முக்கியமான விசயத்தை கவனிக்கவில்லை. நான் பிரேதத்தை தொட்டது என் ஆட்காட்டி விரலால். ஆனால் வாயில் வைத்துக் கொண்டது என் நடு விரலை....எனவே எப்போதும் எல்லாவற்றையும் கூர்ந்து கவனியுங்கள்' என்றார்.
Bookmarks