ஒரு மழை நாளின் விடியலில்
எனதறைச் சன்னலுக்கு வெளியே
சன்னமாய் நனைகிறது உலகம்.
எதிர்வீட்டு ஓட்டின் மேல்
எதுகைத் தாளமிடும் மழைத்துளியும்
எங்கிருந்தோ சுப்ரபாதமும்
இசையாய் இணைந்து
சப்தங்கலள் என்னுள்
சந்தோஷம் தூண்ட.....
விடிகாலை மழையில்
விபரம் புரியா கனவுகளுடன்
விவரிக்கவொண்ணா சிலிர்ப்பு
என்னுள்.
என் காதல்
கனாக்காலங்களும்
என் கவிதைக்
களங்களும்
என் மனங்கவர்
மாந்தரும்
என் இதயங்கவர்
இசையுமாய்
என்னுள் ஏதெதோ
மதர்த்த குழப்பங்கள்.
மடி நிறையப்
புத்தகங்கள் .
என்
மனம் நிறையக்
கனவுகள்.
மனம் கிறங்கி நான்
நாற்காலி மடியில்
ஞானம் தேடும்
புத்தனாய்
ஞாலம் வேண்டும்
கிறுக்கனாய்
என் மோனக் குதிரையில்
என் கவிதைக் காதலியுடன்
கம்பீரப் பிருத்வியாய்.
கவிதைச் சம்யுக்தையின்
காலொடிக்கும்
ஜெயச்சந்திரத் தகப்பனாய்
என் தகப்பனின்
கடிந்த குரல் என்னை
கட்டாந்தரையில் தள்ள......
இனிய மழையே!
இதம் தரு கனவுகள்
ஈந்த போதி மரமே!
ஞானமும் ஞாலமும்
ஞாபகமும் திறனும்
கவியும் கல்வியும்
ஏன் காதலும் தந்த
கருணையே!
விடை பெறுகிறேன் நான்.
இனியொரு நாள்
இடையூறுகளேதுமின்றி
இன்பமாய்ச் சந்திப்போம்.
பிறிதொரு நாள்
பிரிப்பார் யாருமின்றி
பிரியமாய்ச் சந்திப்போம்.
நான் என் கவிதைகளுடனும்,
நீ எனக்குத் தரவிருக்கும் கனவுகளுடனும்
மட்டும்.
Bookmarks