அனைவருக்கும் நன்றி சொல்லித் தொடர்கிறேன்..
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
புறநானூற்றுக்கவிதை − 6
பாடியவர் : புலவர் பரணர்
பாடப்பெற்றவர் - வையாவிக் கோப்பெரும் பேகன்
பாடாண்திணைப் பாடல்..
பாணன் சூடிய பசும்பொன் தாமரை
மாண் இழை விறலி மாலையொடு விளங்கக்
கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைஇ
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்!
யாரீரோ என வினவல் ஆனாக்
கார் என ஒக்கல் கடும்பசி இரவல!
வென்வேல் அண்ணல் காணா ஊங்கே
நின்னினும் புல்லியேம் மன்னே! இனியே
இன்னேம் ஆயினேம் மன்னே! என்றும்
உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்,
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்
எத்துணை ஆயினும் ஈத்தல் நன்று என
மறுமை நோக்கின்றோ அன்றே! பிறர்
வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே!−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
மயிலுக்கே போர்வை தந்த..
'' பாணனாகிய நீவிர் அணிந்த பொன் தாமரையும்
பக்கத்தில் உள்ள உம் விறலி அணிந்த பொன்மாலையும்
ஓரத்தில் நிற்கும் குதிரைத் தேரும்
'இன்னொரு தேசத்து ராஜா இங்குவந்து
இளைப்பாறுகிறாரோ 'என
எண்ண வைக்கிறதே...
எவரோ நீவிர்?'' எனக் கேட்டவனே..கேள்!
உற்றத்துடன் பசியில் உழலும் இரவலனே!
வெற்றிவேல் அண்ணலைக் காணும் முன்னே
உன்னைவிட வாடி இருந்தவர்கள் நாங்கள்..
இன்றைக்கு அந்நிலைமை இல்லை!!
என்றைக்கும் அணியாது என அறிந்தும்
போர்வையை மயிலுக்கு ஈந்த எம் மன்னன்
போர் யானைகள், குதிரைகள் கொண்ட பேகன்
எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுப்பவன்
அடுத்த பிறவியில் வரும் நன்மைக்காக அன்று..
அடுத்து நிற்பவன் வறுமை பார்த்த
அவன் கை வள்ளல்தன்மையால்!
Bookmarks