காதலாய நமஹ...
ஊசியாய் குத்தும்
மழைத்துளியாய்
உன் பார்வை
உரசிய கணத்தில்
நான் நனையவில்லை...
பற்றியெறிந்தேன்..
**********
பூக்கள் உன்னைச் சுட்டி
என்னிடம் கேட்டன
இந்தப் பட்டாம்பூச்சி
நடந்து செல்வது எப்படி என்று?
************
உன் பெயர் என்னவென்று
தெரிவதற்காக
உன் தெருவில் அலைந்து திரிந்து
உன் பக்கத்து வீட்டுப் பையனை
நண்பனாக்கினேன்..
உன் வீட்டில் உள்ளவர்களிடம்
நற்பெயர் எடுக்க வேண்டுமென்று
உன் எதிர்வீட்டுத் தாத்தாவை
வாக்கிங் கூட்டிக் கொண்டு போனேன்..
இப்படி ஒவ்வொருவருடனும் பழகி
உன் தெருவில் உள்ள அனைவரும்
எனக்கு நெருக்கமாயினர்..
உன்னைத் தவிர..
*************
உன் வீட்டு வாசலில்
இருக்கும் அசோகமரமாகவாவது
நான் பிறந்திருக்கலாம்..
அடிக்கடி உன்னைப் பார்ப்பதற்காகவாவது...
*************
தவமிருந்துவிட்டு
வரம் கேட்கும் உலகில்
வரம் வாங்கி விட்டு
உன்னைக் காணவேண்டுமென்று
தவமிருக்கிறேன்...
*************
உன்னைப் பற்றி நினைக்க
ஆரம்பித்த பிறகுதான்
தமிழோடு பரிச்சயமாகி..
இன்று நான்
ஒரு தமிழாசிரியனாக
இருக்கிறேன்..
*************
உன் கொலுசின் அதிர்விலேயே
பூக்கள் பூப்பெய்துவிடுகின்றன..
நான் மட்டும் எம்மாத்திரம்...
*************
அழும் குழந்தைக்கு நிலவைக்
காட்டுவது போல்
காதலில் தவிக்கும் என்
இதயத்திற்கு நான்
உன்னைத்தான் காட்டுகிறேன்..
**************
Bookmarks