பிரியா விடை கொடு,
தோழியே......
நீ எழுதிய மின் அஞ்சல் கிடைத்தது,
ஒரு புனை பெயரில்.
பதில் எழுத வேண்டினாய் -
என் பெயரில் அல்ல,
நீ தந்த ஒரு புனை பெயரில்.
தொலைபேசியின் இணைப்பின்
ஒரு முனை உன் கணவனின்
மேஜையின் மீது....
பெண் தோழிகள் என்றாலும்
நாணமின்றி கடைக்கண்
பார்வை நோக்கும்...
காமத்தினால் அல்ல,
உனக்கு காமுகன் உண்டா
என்ற தவிப்பில்.
தபால்காரனை நேரிட்டு,
உன் கடிதங்கள் பறிக்கப் படுவதால்,
நீயும் தேடுகிறாய் ஒர் வழி......
புரிந்து கொள்ளுதல் இன்றி
புணர்ச்சிக்காக ஆகிப் போனது
உன் மண வாழ்க்கை என்கிறாய்...
புரிந்து கொள்ளுதல்
இருபாலருக்குமே பொதுவென்பதை
புரிந்து கொள்ளுதல்
உனக்கும் வேண்டும், தோழியே....
மனைவிக்குத் தோழன்
காதலன் தான்
என்ற சமூகக் கோட்பாட்டிற்கு
உன் கணவனை மட்டும்
பழிப்பதென்பது தவறு
என்ற புரிதல் உன்னிடம் உண்டா?
தொடர்புகள் நின்று போவதாலே
அன்பு விட்டுப்போம் என்ற
உன் மனம்
நம் நட்பைப் புரிந்து கொண்டதா?
பார்வையில் தோன்றாதது
பாருலகை விட்டுப் போயே விடும்
என்று சொல்லும், நீ
என்ன குழந்தையா?
வாழ்ந்திருப்பேன், உன்னைச் சந்திக்க
வாய்ப்புகள் வாழ்ந்திருக்கும் வரை...
வாய்ப்புகளும் வாழ்ந்திருக்கும்
நாம் வாழ்ந்திருக்கும் வரை....
காதலுக்கு ஒருவன்....
தோழமைக்கு இவ்வுலகம்...
காதலின் அன்பையும்
தோழமையின் அன்பையும்
வித்தியாசப் படுத்திப் பார்க்க
உன் கணவனுக்கு
மொழி கற்றுக் கொடு
புனை பெயரில் தொடர்புகள்
வேண்டாமடியே என் தோழி.
பின் காதலின், தோழமையின் மொழி
புரியாது போனது
நாமாகத் தான் இருப்போம்....
ஆதலால்,
பிரியாத விடை கொடு,
வாய்ப்புகள் வாழ்ந்திருக்கும் வரையிலும்....
நட்புடன்...
Bookmarks