புதிதாய் பிறந்த கவிதை...
சுழன்றடித்த காற்றின் வேகம்
மனம் புகுந்து
சூன்யமாக்கிப் போனது.
இறுகிய கடல் விரட்டிய
வெளிச்சத்தில்
மீந்த இருட்டுக் கரைசல்
சூன்யம் நிறைத்தது.
விரட்டிய அலை நீரோட்டத்தில்
வெறுமை நிறைந்த
காலிப்பானையாய் மிதந்து போனது
எஞ்சிய கனவுகளும்.
கரைந்து விழுந்த மண்சுவரில்
அமுங்கிப் போனது
கனவுகள் சமைக்கும் அடுப்பும்.
அனைத்துமிழந்த அகதியாய்,
வானிலிருந்து வீழும்
உணவுப்பொட்டலம் தேடி
அலைச்சல்.
கரைமீறி பனைதொட்டு ஓடும்
வெள்ளத்தில் நீர் தேடும் தாகம்
புணர்வாழ்வு மையத்தில்
வாழ்ந்த வாழ்வின்
அடையாளம் அறியாத
அவமானங்கள்...
மீண்டும் வாழ்ந்துகாட்டும் வெறியில்
அனைத்து திசுக்களிலும் அவஸ்தையாய்
அலம்பிக் கொண்டிருக்கிறது -
சுயமாய் சமைத்து
பசியாறத் துடிக்கும் வாழ்க்கை....
Bookmarks