அப்பாவின் அறைக்குள்
நான் நுழைவதில்லை
அன்று ஒருநாள்
நான்
பார்த்துக் கொண்டிருக்கும் போதே
ஒரு மிருகம்
உறுமிக் கொண்டே
ஜன்னல் கம்பிகளினூடாக
அப்பாவின் அறையில் நுழைந்தது.
முடிநிறைந்த தேகம்.
தள்ளாடும் கால்கள்.
மமிசமும் புகையும் நாறும் வாய்.
கடுகடுக்கும் சிவப்பு கண்கள்.
அன்றிலிருந்து அப்பாவின் அறைக்குள்
நான் நுழைவதில்லை.
வாசனைமிக்க சோப்பால்
உடல் நாற்றம் போக்கும்.
நறுமணத் தூவாளையை
பீச்சியடிக்கும்
நாகரீக உடையின் மேலே.
பின் எடுத்து மாட்டும்
அப்பாவின் முகத்தை.
சீறி சீறிப் பாயும் - அம்மாவின் மீது.
என்னை மட்டும் பார்த்துப் புன்னகைக்கும்
நான் அப்பாவின் அறைக்கு
வெளியே நிற்கும் வரைக்கும்.
காலையில் போகும் வேட்டைக்கு -
அலுவலகத்தில் புள்ளிமான்கள் உண்டாம்
எதிர்க்க திராணியற்ற அப்பிராணிகள்..
இரவில் வரும் நேரம் எனக்குத் தெரியும்
என்னை அணைத்துப் படுத்திருக்கும்
அம்மா
தன் ஆத்மாவை மட்டும்
என் மீது போர்த்திவிட்டு,
உடலை மட்டும் எடுத்துப்போவாள் -
முகமூடியை கழற்றி வைத்த
அப்பாவின் அறைக்கு.
அப்பாவே,
நீ எப்போதும் முகமூடி
மாட்டியே இரு -
எனக்குப் பிடித்த மாதிரியே?
Bookmarks