பரணைக் கிளறிய பொழுது
ஒரு பழைய கணக்குப் புத்தகம்.
தூக்கியெறிந்த பொழுது
தன்னாலே திறந்து நின்றது
நீ தந்த மலரொன்றை
மறைத்து வைத்த பக்கம்.
இருபது வருடம் கழிந்த பின்னும்
மணம் ஒரு நிமிடம்
மயங்க வைத்தது மனதை.
நாசியினாலும் காணமுடிந்தது -
நினைவுகள் உன்னுடையதாயிற்றே?
நீயும் நானும் பயணித்த சாலைகள்
பயணற்றுப் போக
பக்கத்திலே புதிய சாலைகள்
கன்யாகுமரியையும், காஷ்மீரையும்
இணைப்பதற்கு.
நீ பூப்பறித்து தந்த தோட்டங்கள்
இன்று வாகனங்களுக்கு
பெட்ரோல் ஊற்றும் நிலையங்களாக
புன்முறுவலாக நிற்கிறது -
நீயும் நானும் வாகனங்களின்றி
எங்கெங்கோ நிற்கிறோம்.
நீ சிலாகித்து பரவசப்பட்ட
இயேசுவின் சிலையோ
மறைந்துவிட்டது -
பலமாடி வணிக வளாகத்தின் பின்னே.
நீ குதூகலித்துப் பார்க்கும்
தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் வழியே
பஸ்கள் பயணிப்பதில்லை இப்பொழுது -
மாற்றுப்பாதையில் வழுக்கிக் கொண்டு
விலகிப் போகிறது.
வருடம் முழுக்க
காய்ந்துபோன இலையற்ற
மரம் வெட்டப்பட்டுவிட்டது....
அரசு மருத்துவமனைப் பயணத்தில்
பக்கத்திலிருக்கும் கண்தெரியாத
அம்மா சொல்கிறாள் -
நம்ம திருநெல்வேலி முன்னேறிச்சுடா.
முன்னேறியது நகரம் மட்டும்தானம்மா -
பெருமூச்சுடன் மூடினேன் புத்தகத்தை
நீ தந்த பூவும்
நம் நினைவுகள் போலவே
மெலிந்து கருத்துப் போய்
சருகாகியிருந்தது.
Bookmarks