மடங்கி விட்ட கைகள்..
அத்தனை பேரையும்
அணைத்து வளர்த்த கைகள்
ஆறுதல் தந்து, ஆதுரம் தந்து
அமைதி அளித்திட்ட கைகள்
இல்லாதவன் வீடுதான்..
இருந்தாலும்
எப்படியோ உண்ண, உடுத்த , வளர்க்க
ஏற்பாடு செய்திட்ட
மந்திரமான கைகள்..
ஓய்ந்துவிட்ட கைகள்...
பஞ்ச காலங்களில்
பைசாவுக்கு நாலு முந்திரி உடைத்து
கருத்துப் போன கைகள்
ஆற்றோர எருமுட்டை
காட்டில் காய்ஞ்ச சுள்ளி
பொறுக்கி காய்த்த கைகள்
கரும்புச்சோலை அடுப்பின்
சுவாலை தீய்த்த கைகள்
சாய்ந்துவிட்ட கைகள்...
கதிர் அறுவா பட்டு
காயம்பட்ட கைகள்
களை பறிப்பு, நாற்று நடவில்
சேற்றுப்புண் பட்ட கைகள்
அறுவடை போது
கூர் சுனை குத்திய கைகள்
தை பிறப்பு நாளில்
பொங்கல் ஊட்டிய கைகள்
காய்ந்துவிட்ட கைகள்...
மத்தியான பசி ஆட்களுக்கு
மொத்தை சோறு இட்ட கைகள்
கூடத்து கோழிக்கு
குருணை அள்ளி விசிறிய கைகள்
ஆயி கழுவிவிட்ட கைகள்
ஆனை கட்டி ஆட்டிய கைகள்
இன்று
மடங்கி விட்ட கைகள்..
ஓய்ந்துவிட்ட கைகள்...
சாய்ந்துவிட்ட கைகள்...
ஓய்ந்துவிட்ட கைகள்...
சலனமற்ற கைகள்.....
என் வெப்பக்கண்ணீரை வாங்கி
தலை புதைத்த என் மீது
ஆசிப் பன்னீராய்
வார்க்கும் கைகள்...
Bookmarks