என் ஆயுளை நானே
கிழித்துக் கொண்டிருக்கிறேன்...
ஒரு நாள்
கிழிப்பதற்கு நாட்காட்டி இருக்கும்...
நான் இருக்க மாட்டேன்...
பின்பு நாட்காட்டியைக் கிழிப்பது யார்?
இதைப்பற்றிய கவலைதான் எனக்கு...
இந்த அழுக்கு பூமியைக் குளிப்பாட்ட வேண்டும்...
அன்று மனிதர்களை எல்லாம்
வானிற்கு அழித்துச்செல்லும்
சுற்றுலா தினமாக்கிவிடுவேன்...
அவர்கள் திரும்பி வரும் பொழுது
பூமி பளிச்சென்று இருக்கும்..
ஆனால், அவர்கள் சுற்றுலாவிற்கு வர மறுத்தால்?
இதைப் பற்றிய கவலைதான் எனக்கு...
பூக்களையும் பட்டாம்பூச்சிகளையும்
அழைத்து விருந்து கொடுக்க வேண்டும்..
நான் அவ்வப் பொழுது மகிழ்ச்சியாக
இருப்பதற்கு துணை செய்வதால்...
விருந்து பிடிக்கவில்லையென்றால்?
இதைப்பற்றிய கவலைதான் எனக்கு...
இப்படி என் கவலைகள்
நீண்டு கொண்டே போவதால்
ஒரு நாள் நான் கவலையை மறக்கவேண்டும்...
அப்படி மறக்க முடியவில்லையென்றால்?
இதைப் பற்றிய கவலைதான் எனக்கு...
Bookmarks