தமிழர் தொன்மமும் - பண்பும்:

"காக்கை குருவி எங்கள் தமிழ்ச்சாதி", "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என மனிதர் அல்லாத பிற உயிர்களின் மீதும் பெரும் அன்பினை போதித்தவர்கள், அவர்களுக்காக கசிந்துருகியவர்கள் பாரிய பண்பாட்டு பெருமைக்கும், கலாச்சாரத்திற்கும் உரிய எம் தமிழர்கள் என்றால் அதில் மிகை ஏதுமில்லை. அவைகளுக்கான எடுத்துக்காட்டுகளே..

பற்றி படர ஏதுமற்று நின்ற முல்லைக்கொடிக்கு தம் தேரையே ஊன்றுகோலாக அளித்த மன்னன் பாரி, குளிரில் நடுங்கி கிடந்த மயிலுக்கு தம் போர்வையை ஈந்தளித்த பேகன், பசுக்கன்றின் மீது தேரை ஏற்றி கொன்றுவிட்ட காரணத்திற்காய் அதே போல் மரணதண்டனை விதித்திட்ட மனு நீதிச்சோழன், தவறான தீர்ப்பு வழங்கியதற்காய் தம் உயிரினைத் துறந்த பாண்டிய மன்னன் ஆகியோர்களெல்லாம்.

ஆக, இத்துணை தொன்ம ; பண்பாட்டு கலாச்சார பெருமைகளுக்கு உரிய எம் தமிழினம் தான் இன்றைக்கு சொல்லொணா துயர்களுக்கு ஆளாகி கையறு நிலையில் நின்று கண்ணீர் வடிகிறது. அதற்கான காரணம், சரியான வழிகாட்டுதலும் ; தன்னலமற்ற தலைமைகளும் இல்லாததன் காரணத்தினாலேயே.

வேண்டும் தன்னலமற்ற அரசியல் :

ஈழத்தில் தம் பூர்விக நிலத்தில், தமக்கான நாடு கோரி அற வழியில் ; ஆயுத வழியில் போராடி நின்ற மக்கள் மீது வல்லாதிக்க நாடுகள் யாவும் ஒருங்கிணைந்து ஓர் பாரிய மனித உரிமை மீறல் போரினை தொடுத்த போதும், இங்கே தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் தம் சுய நலத்துடனேயே சிந்தித்தார்களேயொழிய, எம் இனம் ; எம் மக்கள் ; அங்கே கொத்துகொத்தாய் செத்து மடிபவர்கள் எம் தொப்பூழ் கொடி உறவுகளென எள்ளளவும் சிந்தித்திட வில்லை.

அதே சமயம், தமிழகத்திலும் இன்றைக்கு கல்வி, மருத்துவம் என அத்தியாவசிய துறைகள் உள்ளிட்ட அனைத்திலும் தனியார் மய பெரு நிறுவனங்களின் ஆதிக்கம் தலை விரித்து ஆடுகிறது. அவற்றை நெறிமுறைப்படுத்தவோ ; குடிமக்களுக்கான கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றை தாமே முன்வரவோ எந்த அரசும் முன் வரவில்லை.


மக்களுக்கான அரசு :

தை முதல் நாளே தமிழர்க்கு தமிழ்ப்புத்தாண்டு என்பதனை மாற்றி சித்திரை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு எனவும் அறிவித்துள்ளது அதிமுக அரசு. ஆக, தமிழ், தமிழர் பண்பாடு, தமிழர் நலன் என சிந்திக்கிற செயலாற்றுகிற சக்திகள் தமிழகத்தில் ஆட்சி பொருப்பினுக்கு வந்திடுமேயானால் நிச்சயம் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இத்தகைய துயரங்கள் யாவும் களையப்படும் என்பதில் ஐயமேதுமில்லை.

அத்தகைய சக்திகளை ஆட்சிப்பொறுப்பில் அமரவைத்திடுவது மக்களிடத்தில் தான் உள்ளது என்பதிலும் மாற்று கருத்து ஏதுமில்லை. எனவே, மக்களிடத்திலிருந்தே துவங்கட்டும் தமிழுக்கான ; தமிழர்களுக்கான இன்னுமோர் புரட்சி.

நன்றி
IBC Tamil