சிறுகதை (132 வார்த்தைகள்)
பொம்மை
- ஆர். தர்மராஜன்
பொழியும் பனியில் வந்த ரொடரிக்... குதிரைமேல் உட்கார்ந்தபடி... ஒரு அழகான
பொம்மையைத் தனக்குப் பின்னால் மறைத்துப் பிடித்து... “வெரோனிகா! டாடி வந்துட்டேன்!” என்றான்.
எதிரே... பனி போர்த்திய பாறைகள் மறைந்து... ஒரு வீடு தெரிய... வீட்டின் ஜன்னல்களில்
மஞ்சள் வெளிச்சம் பளிச்சிட...
“ஹையா டாடி! பொம்மை... பொம்மை!” வீட்டிலிருந்து உற்சாகமாகத் துள்ளி ஓடி வந்தாள் ஒரு சிறுமி.
பார்த்த ரொடரிக்கின் கண்கள் பனித்தன.
வெரோனிகா கையை நீட்டி... “டாடீ... பொம்மை!” என்று கெஞ்சியவாறு பக்கம் வர...
ரொடரிக் பொம்மையை உயர்த்திப் பிடித்தான்.
அடுத்த கணமே... வீடு... வெளிச்சம்... வெரோனிகா... எல்லாம் மறைந்தன.
தெரிந்தது பாறைகளும் பனியும். இதயம் கனக்க... திரும்பினான்.
மந்திரவாதி பெர்னார்ட் எதிர்கொண்டான். “குழந்தை தெரிந்தாளா, ரொடரிக்?”
“ம்,” விம்மினான் ரொடரிக். “அவ கடைசியாக் கேட்ட பொம்மையை நான் கொண்டு
வர்றதுக்குள்ள... விதி நிலச்சரிவு ரூபத்துல... என் வீட்டைத் தரைமட்டமாக்கி...”
“நடந்து முடிஞ்சதை நினைக்காதே. இனி... ஒவ்வொரு விடியலுக்கும் இங்க வா. இந்த
மந்திரிச்ச பொம்மையோட சக்தியால... சில வினாடிகளாவது உன் மகளைப் பார்க்கலாம்.
ஏதோ... என்னால தர முடிஞ்சது இதுதான். ஆனா மறந்துடாதே...”
“தெரியும். பொம்மையை அவகிட்ட தரக்கூடாது.”
“தந்தா... அதைக் கொண்டு போயிடுவா... அப்புறம் அவளோட ஆவியைக் கூப்பிட
என்னால் முடியாது.”
(முற்றும்)
Bookmarks