நண்பன் சொன்னான்
நீ தட்டச்சு பயிலுவதாக..
பேருந்து நிறுத்தத்தில் நின்றால்
நிமிடம் போல பார்க்கலாமாம்..
காத்திருத்தல் காதலில் சுகமென
யார் சொன்னது...
என் பிரசவ வேதனை
எனக்கு மட்டுந்தானே தெரியும்..
கால் மணி நேரத்தில்
சாலை முழுக்க
நான் வட்டமிட்ட தூரத்தில்
பொடி நடையாய்
வான வில்லையே தொட்டுத் திரும்பியிருக்கலாம்!
தூரத்தில் தெரிவதெல்லாம்
நீயாக என்னில் நிறக்குருடு!
இது நீயா, அது நீயா
என்ற உரு(வ) மயக்கம்!
ஒரு கணம்... ஒரே ஒரு கணம்
மின்னி மறைந்தாய்
தட்டச்சு பயிலகத்தினுள்..
ஆனாலும்
மேல வீதிஅன்று முழுமைக்கும்
எனக்கு மட்டும்
ராஜவீதியாய் மாறிப் போனது!
Bookmarks