சிறுகதை (115 வார்த்தைகள்)
அலுத்துக் கொண்டே தன் மேஜைக்கு வந்தான் சிங்காரம். “என்ன சாப்டறீங்க?” என்றான்.
“இட்லி...வடை... காபி,” என்றார் வந்தவர்.
“ம்,” என்று நகர்ந்தான்.
“என்னப்பா... சிங்காரம்... இன்னிக்காவது இவரு டிப்ஸ் தருவாரா?” வேறொரு சர்வர் கேட்டான்.
“ஒரு வருஷமா ஒண்ணுமே தராத கருமிப்பய... இனிக்கி தந்துருவானா?” எரிச்சலுடன் முணுமுணுத்த சிங்காரம்,
இட்லி வடை மற்றும் ஆவி பறக்கும் காபியோடு திரும்பினான்.
தட்டையும்... காபியையும் தூக்கி எறியாத குறையாய் வைத்தான். விருட்டென்று திரும்பி நடந்தான்.
பத்து நிமிடங்களில்... டிபனையும் காபியையும் முடித்துவிட்டு... வழக்கம் போல் டிப்ஸ் எதுவும் வைக்காமல்...
பணத்தைத் தானே கவுன்டரில் செலுத்தினார் வந்தவர். அப்படியே... கல்லாவில் இருந்த ஹோட்டல்
முதலாளியிடம் பேசினார்.
“சார்... ஒரு வருஷம் இங்க வந்து டிபன் சாப்பிட்டு... இங்க நடக்கறதை அப்சர்வ் பண்ணி... ஒரு முடிவு
எடுத்திருக்கேன். உங்க ஹோட்டலை விலைக்கு வாங்கிக்கறேன். எல்லா வேலையாளுகளுக்கும் சம்பளம்
இருபது பர்சென்ட் உயர்த்திடறேன். ஆனா... ஒரு கண்டிஷன்.”
“சொல்லுங்க சார்.”
“டிப்ஸ் தர்றவங்களை மட்டும் மதிக்கிற அந்த சிங்காரம் பயலை... நீங்க ஹோட்டலை எனக்கு விக்கறதுக்கு
முன்னாடியே டிஸ்மிஸ் பண்ணிடணும்.”
Bookmarks