ஆண்:
என் காதல் வானில்
ஒரு மேகமாய் வந்தாய்! - மழை தர....
ஏற்றுக்கொள் என்றேன்!
உனை மாற்றிக்கொள் என்றாய்!
மறுத்தாய்! - மனம் தர.....
பெண்:
வண்ணங்கள் கொண்ட
ஒரு வானவில் காதல்! - கலைந்திடும்!
தோழமை முன்னால்
தினம் தோற்றிடும் காதல்!
இல்லை நிரந்தரம்!
ஆண்:
விழிகளில் கடிதம் எழுதிடும் எண்ணம்
எனக்கின்று வந்தது!
மனமெனும் வீட்டின் கதவுகள் உடைந்து
உறக்கமும் தொலைந்தது!
பெண்:
மழை கொண்ட மண்ணின் வாசனை என்றும்
மழைக்கு தான் சொந்தமா?
விழிகளில் விரியும் காட்சிகள் உந்தன்
விழியிலே தங்குமா?
ஆண்:
காதல் தான் நெஞ்சில் வேதமாய்
உன்னாலே"இன்று ஆனது!
பேதங்கள் சொல்வதென்ன நியாயம்?
பெண்:
கண் மூடித்திறக்கும் நொடியிலே
மின்னல் போல் வந்து தாக்குமே!
இது தானே காதல் செய்த மாயம்!
ஆண்:
காதலில் கண்கள் அம்பினால் தாக்க
வளைத்தது வில்லையே!
கண்களைப்பார்த்து கடிதமும் கொடுக்க
துணிவது இல்லையே!
பெண்:
பெண்களின் பார்வை பேசிடும் வார்த்தை
காதல் தான் என்கிறாய்!
நண்பனாய் எண்ணும் பெண்களை காணும்
கண்களால் தின்கிறாய்!
ஆண்:
உன் கண்ணில் காதல் வந்ததும்
நீ சொல்லும் வார்த்தை யாவுமே
பொய்யென்று மாறிப்போகும் மானே!
பெண்:
நெஞ்சோடு வந்த நட்பு தான்
நஞ்சென்று மாறிப்போகுமா?
கண் கொண்ட காதல் வஞ்சம் தானே!
Bookmarks