அன்பர்களுக்கு வணக்கம். மீண்டும் ஒரு கதையை பகிர்ந்து கொள்கிறேன்.
படித்து விட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

ஆறுவது சினம்



ஏன்ங்க இன்னைக்கு புயல் வரும்னு டி வியில சொல்றாங்க, இப்புடி வெயிலடிக்கி... புயல் வருமாக்கும்.?

மகேஸ்வரி சமையலறையில் வேலையாக இருந்தாள். எட்டுக்கு பத்து அறைக்கு அடுத்து தடுப்பு சுவருக்கு அந்தப்பக்கம் சமையலறை. கார்த்தி வெளி வராந்தாவில் தன் நடமாடும் தையல் வண்டியை துடைத்துக்கொண்டிருந்தான். இரண்டு குழந்தைகள் பாயில் தூங்கி கொண்டிருந்தன.

வந்தாத்தான் தெரியும்.. ஏற்கனவே ஜனங்க கையில காசில்லாம நம்ம வேலை ஓட மாட்டுங்குது. புயலும் வந்தா வெளங்கினாப்பில தான்.

ஸ்கூல் கூட லீவு விட்டுட்டாங்க...புயலுக்கு பேரு கூட சொன்னாங்க.. என்னமோ பேராச்சே... என்றாள் மகேஸ்வரி புயலின் பேரை யோசித்தபடி.

சாயந்திரம் சீக்கிரம் வரப்பாரு. மழை தண்ணி நேரமாயிருக்கு.


காலை நேர வெயில் பளபளவென ஏறியிருந்த்து. தெருவில் கோலமாவு விற்கும் பெண்மணி "கோல மாவே... கோல மாவெ.." என கூவிக்கொண்டு போய்க்கொண்டிருந்தாள்.
டி.வி யில் மற்ற செய்திகளை பின்னுக்கு தள்ளி விட்டு வானிலை செய்தியே முக்கிய செய்தியாய் இருந்தது.

ம்.. டிவி யில சொல்றான் பாருங்க.. வர்தா புயலாம் பேரு......

.......................

வேலை செய்ற எடத்தில துணிகள தண்ணி படாம வச்சிருக்கிங்களா..? வாட்ச்மேன் ரூம்ல ஒரு ஓரமா தான வச்சிருப்பிங்க..! தண்ணி கிண்ணி படுமா..?

அதெல்லாம் நனையாது..... மரப்பெட்டியிலதான் வச்சிருக்கேன்.

கார்த்தி ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே நடமாடும் தையல் வண்டியை வைத்து துணி தைப்பது வழக்கம். சில சமயங்களில் துணி கூடுதலாக சேர்ந்து விட்டால் அங்கிருக்கும் வாட்ச்மேன் அறையில் வைத்துக்கொள்வான்.

இன்னைக்கு நீங்க வேலைக்கு போக வேணாம். பிள்ளைங்க ஒங்க கூடயே இருக்கட்டும். நான் போயிட்டு சீக்கிரமா வந்திடுறேன்.

அதெல்லாம் அந்தளவுக்கு ஒன்னும் வராது. வந்தா பாத்துக்கிடலாம்.

சற்று நேரத்தில் மகேஸ்வரி மடமடவென வேலைகளை முடித்து விட்டு மதிய உணவை தனக்கு டிபன் பாக்ஸில் நிரப்பிக்கொண்டாள். அவசரமாய் சில கவளங்களை தன் வாயில் போட்டுக்கொண்டாள்.

ஒங்களுக்கு டிபன் கட்டல. சாப்பாடு இருக்கு, அந்த கிண்ணத்தில உருளை கிழங்கு வறுத்து வச்சிருக்கேன். நேத்து வச்ச கார குழம்பு இருக்கு. சாப்பிடுங்க. பசங்களுக்கும் வச்சு குடுங்க.


மகேஸ்வரி வாசலை தாண்டி வெளிய வந்ததும் மழை தூறலை பார்த்து, இந்தா மழை வந்திருச்சே...என்றாள்

இந்த மழையெல்லாம் ஒன்னும் செய்யாது அங்க பைக் ஸ்டாண்டில வச்சு தச்சுக்கலாம்.

சரி பாத்து போயிட்டு வாங்க. பிள்ளைங்கல அத்த கிட்ட போயி விட்டிருங்க.

நீ கூட இன்னைக்கு லீவு போட்டிரலாம். தனியார் கம்பெனிங்க எல்லாம் கூட லீவாம்.

அப்படியே இருந்தாலும் போயி பார்த்துக்குட்டு வர்ரேன். இல்லன்னா எங்க சூப்ரேசர் அக்கா கிட்ட வாத்துமானம் வாங்க முடியாது.

மகேஸ்வரி தெருவில் இறங்கி நடந்தாள். தெரு முனையை கூட தாண்டியிருக்க மாட்டாள். மழை சடசடவென பெய்ய துவங்கியது.

சுவரில் ஆணியில் மாட்டியிருந்த குடை கார்த்தியின் பார்வையில் பட்டது. "கொடய எடுக்காம போறாளே" என முனுமுனுத்தபடி குடையை எடுத்துக்கொண்டு தெருவுக்கு ஓடினான்.

ஆனால் அதற்குள் மகேஸ்வரி ஷேர் ஆட்டோவில் ஏறி புறப்பட்டிருந்தாள். இது போன்ற சமயங்களில் பஸ்ஸை எதிபார்த்தால் வேலைக்கு ஆகாது என்பது அவள் அனுபவம்.
கார்த்தி ஏமாற்றத்துடன் வீடு திரும்பினான்.


சுமார் ஒன்பது மணிக்கு மேல் காற்றின் வேகம் அதிகரித்தது. மரங்களின் இலைகளின் சலசலப்பும் ங்கொய்...ங்கொய்... எனக் காற்றின் ஓசையும் சாலைகளில் கடைகளின் முன்பக்கம் வேய்ந்திருந்த தகர கீற்றுகள் அதிரும் சத்தமும் ஏதோ விபரீதம் நடக்கப்போவதை முன்னறிவிப்பது போல் இருந்தது. சாலையில் குடை பிடித்து செல்பவர்களின் குடைகள் காற்றுக்கு தாங்காமல் எதிர் புறமாக மடங்கி குடை கம்பிகளை பழுதாக்கியது. நகரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின் கம்பங்களும் அதனூடே செல்லும் மின் கம்பிகளும் கேபிள் டிவி ஒயர்களும் பறவை எழுந்து போன கயிறு போல ஆடிக்கொண்டிருந்தன. சுழன்றடித்த காற்றுக்கேற்ப மழை நடனமாடிக்கொட்டியது. சாலைகளில் நீர் பெருகியது.


மகேஸ்வரி பணிபுரியும் அலுவலகத்தில் ஈரத்தரையை துடைத்துக்கொண்டிருந்தாள். வெளி வாசலின் கண்ணாடி கதவுக்கு வெளியே புயலின் வேகத்தில் மழை பரவி வீசி
கொட்டிக்கொண்டிருந்தது. இத்தனை நாளாய் இதமான காற்றுடன் நிழல் தந்து கொண்டிருந்த மரமொன்று புயலுக்கு தாழாமல் தலை விரி கோலமாய் அலறிக்கொண்டிருந்தது. இரண்டு உள்ளங்கை அளவுள்ள இலைகளை கொண்ட அந்த பெயர் தெரியாத மரம் புயலின் வேகத்தில் வளைந்தது. காற்று சற்று அடங்கியவுடன் நிமிர்ந்தது. மீண்டும் மீண்டும் சாய்ந்து நிமிர்ந்து அதன் தவிப்பு தொடர்ந்தது. அடுத்த சில நிமிடங்களில் பெரும் சத்தத்துடன் சாய்ந்த போது வேர்கள் மண்ணுக்கு வெளியே வந்தது. அதன் பிறகு அந்த மரம் நிமிரவில்லை. நீண்ட உயர்ந்த தென்னை மரங்கள் இப்போது காற்றின் வேகத்தில் ஒரே பக்கமாய் அத்தனை கீற்றுமாய் அச்சமூட்டும் புதுக்கோலத்தில் ஆடியது.


அந்த அலுவலகத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனாலும் மகேஸ்வரிக்கும் அவளுடன் பணி புரியும் சகாக்களுக்கும் அதிகமாகவே வேலை இருந்த்து. மழையின் காரணமாக
அவளுடன் பணி செய்பவர்கள் பலர் வராததால் வந்திருந்தவர்களுக்கு வேலை அதிகம் இருந்தது. ஒரு வழியாக புயல் ஓய்ந்தபோது மணி மூன்றுக்கு மேல் ஆகியிருந்தது. அந்த
நேரத்திலேயே ஆறு மணிக்கு மேல் ஆனதை போல வெளிச்சம் மங்கியிருந்தது. சாலைகளில் மழைநீர் வடிந்து ஓடிக்கொண்டிருந்தது. செல்போன் தொலைபேசி எல்லா இணைப்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தன. ஷேர் ஆட்டோக்கள் கூட எதுவும் கண்ணில் படவில்லை. ஒரு பஸ் கூட ஓடவில்லை. சாலையில் சிலர் நடந்து போய்கொண்டிருந்தார்கள். வண்டிகள் எதுவும் வருவதற்கான அறிகுறி தெரியவில்லை. மகேஸ்வரி மனதில் அச்சம் பரவியது. வீட்டில் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்களோ என்ற எண்ணம் வந்த போது தன்னையும் மீறிய ஒரு தைரியம் வந்தது. நடந்தே போகவேண்டியதது தான் என்ற முடிவுக்கு வந்தாள்.


தனக்கு தெரிந்த சாலை வழியே வேகமாக நடந்து வந்தாள். சாலைகளில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லை. கூப்பிடு தூரத்தில் ஒரு பெண் நடந்து போய்க்கொண்டிருந்தாள் அவளை பிடித்து விட்டால் அவளுடனே நடந்து போனால் கொஞ்சம் தைரியமாயிருக்கும். நடையில் வேகத்தை கூட்டினாள். மூச்சு வாங்க வேகமாக நடந்து அவளருகில் வந்து விட்டாள். பிறகு அந்த பெண் நடக்கும் வேகத்துக்கு நடந்தாள். அவளிடம் கேட்டாள்.

அக்கா.. நீங்க எங்க போறிங்க

விருகம்பாக்கத்துக்கு... நீ..?

நானும் அங்க தான்... என்ற மகேஸ்வரி நீ\ண்ட பெரு மூச்சு விட்டாள். ஒங்களுக்கு வழி தெரியுமா..?

டெய்லி வர்ர வழி தானெ. போயிடலாம்.

எனக்கு வழி தெரியாது. பயந்துக்கிட்டே வந்தேன். இப்ப தான் வேலைக்கு சேந்து ஒருமாசம் தான். ஆவுது.

அதான்.. என்ன வேலை பாக்குற..?

பெருக்கிற வேலை தான்.

என்ன படிச்சிருக்க.

படிக்கலக்கா.. அஞ்சாவது வரைக்கும் தான் படிச்சேன்.

அவர்கள் பேசிக்கொண்டே நடந்தார்கள். ஆனாலும் மகேஸ்வரியின் மனதில் "எப்போ வீட்டுக்காரரையும் பிள்ளைகளையும் பார்ப்போம்" என்று இருந்தது. சாலையிலே பல ஆண்டுகளாய் நிழல் பரப்பி நின்ற மரங்கள் முறிந்து விழுந்த்து கிடந்தன. சில வேரோடு பெயர்ந்து சாலையில் சரிந்து படந்து கிடந்தன. பேருந்து நிலையங்களில் இருந்த இரவுகளில் மின்னும் விளம்பர விளக்குகள் உடைந்து போயிருந்த்தன. பல விளம்பர பதாகைகள் கிழிந்த்து தொங்கி தங்கள் நிலையை சொல்லி அழுவது போல் இருந்தது. சாலை முழுவதும் ஈரமான மர இலைகளும் ஒயர்களும் விழுந்து ஆங்காங்கே சிதறி கிடந்தன.


நகரமெங்கும் இருளில் அமிழ்ந்திருந்த்து. மகேஸ்வரி இன்னும் வந்தபாடில்லை.
நேரம் செல்ல செல்ல கார்த்திக்கு நெருப்பின் மேல் நிற்பது போல் இருந்தது. இப்ப வந்திடுவாள் என எண்ணி எண்ணி காத்திருந்து சலித்து போனது. பிள்ளைகள் அழ ஆரம்பித்து விட்டனர். ஒன்னாவது படிக்கும் அனு சமத்தானவள் சொன்னா கேட்டுக்கொள்வாள். அவன் இரண்டு வயது வாண்டு இருக்கானே அவன் தான் அம்மாவை நினைத்து அழ ஆரம்பித்து விட்டால் அவன் அழுகையை நிப்பாட்ட எந்த கொம்பன் வந்தாலும் முடியாது. அவன் ஆரம்பித்து விட்டான்.

"ராசா, இப்ப வந்திடுவா அம்மா.." பாட்டி சமாதான படுத்திக்கொண்டிருந்தார்

வண்டி வசதி இல்லாம எப்படி வர்ராளோ..? வழி தெரியுமோ தெரியாதோ..? கார்த்திக்கு கவலை ஒரு புறம்
சொல்ல சொல்லக் கேக்காம வேலைக்கு போனால்ல..! .வரட்டும் வச்சுக்கிறேன்.. இனிமே வேலைக்கே போக வேண்டாம்னு சொல்லிடுறேன்.... கோபம் ஒரு பக்கம்
ஆனாலும் போன மாசம் அவள் சம்பளம் வீட்டு வாடகை குடுக்க எல்ப்பா இருந்த்துச்சு... சமாதானம் ஒரு புறம்

எந்தப்பக்கமா வர்ராளோ? ஒரு வேளை வர்ர வழியில அவுங்க அம்மா வீட்டுப்பக்கம் போயிருப்பாளோ? அங்க போய் பாத்துட்டு அப்படி இல்லைன்னா அந்த ரோடுங்கள்ல போய் தேடலாம் பக்கத்து வீட்டு வாசலுக்கு போனான்.. சந்திரன்னா..சந்திரன்னா என கூப்பிட்டு அவரிடம் விபரத்தை சொன்னான்.
சந்திரன் சட்டை அணிந்து கொண்டு வெளியில் வந்து டி.வி.எஸ்-50 வண்டியை இயக்கினான்

சிறிது நேரத்தில் மகேஸ்வரியின் அம்மா வீட்டை அடைந்தார்கள். வண்டியின் சத்தத்தை கேட்டு அவளது தம்பி தெரு வாசலுக்கு வந்து அழைத்தான்.

வாங்க மாமா.. உள்ள வாங்க.

இல்ல.. இருக்கட்டும். இவ மகேசு காலையில வேலைக்கு போனா இன்னும் வரல. அதான் பாக்க வந்தேன். இங்க கண்டு வந்தாளா..?

இல்லையே மாமா.. மணி ஏழே கால் ஆயிடுச்சே.. இன்னுமா வரல. எல்லா ஆபிசும் இன்னிக்கு லீவுன்னு சொன்னாங்க.

போக வேண்டாம்னு சொன்னேன். கேக்காம போயிருக்கா.. கோபமும் அச்சமுமாய் சொன்னான்.

சரி வந்துக்கிட்டிருப்பா.. ஒன்னும் பயப்படாதிங்க. பிள்ளைங்க எங்க இருக்கு

அம்மாகிட்ட இருக்குங்க. அவன் சின்னவன் வேற அழ ஆரம்பிச்சுட்டான். இன்னைக்கு வரட்டும்.....ஒரே வப்பு....வேலையும் வேண்டாம் மயிறும் வேண்டாம்னு எழுதி குடுக்க சொல்லிட்றேன்

இப்ப வந்திடுவா

நான் வண்டியில போயி பாக்குறேன். - கார்த்தி வண்டிக்கு திரும்பினான்.

சரி பத்திரம். வந்த ஒடனெ போன் பண்ணுங்க.

கார்த்திக்கு மனதில் ஆற்றாமையும் கோபமுமாய் இருந்தது. கண்ணீர் பெருகியது. வரட்டும்..மனசுக்குள் சொல்லிக்கொண்டான்.


விருகம்பாக்கத்திலிருந்து தேனாம்பேட்டைக்கு அந்த ஆபிசுக்கு சென்றார்கள். சாலையில் வரும் வழியெல்லாம் ஒவ்வொருவராக பார்த்துக்கொண்டே வந்தான்.
வண்டியின் வேகத்தில் உடலில் குளிர் பரவியது. "அவ குளிர் தாங்க மாட்டா" என நினத்தபோது அவளோட ஸ்வெட்டர கையில கொண்டு வந்திருக்கலாம் என தோன்றியது.

மொதல்ல அவள பாத்தா போதும் வேற எதுவும் இப்ப வேணாம்.

அலுவலகம் வந்து பார்த்த போது மர இலைகள் பரவி விழுந்து புயலில் சிக்கி மீண்ட கப்பல் போல் இருந்தது. அலுவலக வாசலிலே செக்யூரிட்டி மட்டும் காது மறையும் அளவுக்கு துண்டைகட்டியவாறு அமர்ந்திருந்தார். அவரிடம் கேட்ட போது "மூணு மணிக்கே ஆபிஸ் லீவு விட்டு எல்லாரும் போயிட்டாங்களே." என்றார்

கார்த்திக்கு ஏமாற்றம்.. இயலாமை... கோபமாய் இருந்தது. அவர்கள் வீடு திரும்பினர். "கடவுளே, நான் வீட்டுக்கு போறதுக்குல்ல அவ வந்திருக்கட்டும்" என வேண்டிக்கொண்டான்.
சாலையில் தேடிக்கொண்டே வந்து வீட்டை அடைந்தார்கள்.

ஆனால் வீடு பூட்டியே கிடந்தது. அவள் இன்னும் வரவில்லை. பயம் அதிகமானது. சோர்ந்து போனான். சற்று ஓய்வு தேவை.
கதவை திறந்து உள்ளே சென்றான். வீடு இருளாய் கிடந்தது அவன் மனசை போலவே. சாமி படத்துக்கு அருகே இருந்த காமாட்சியம்மன் விளக்கை ஏற்றி வைத்தான்.

இப்போது கோபம் அடங்கியிருந்தது "அவ வந்தா போதும்" என தோன்றியது. நாக்கு வரண்டு தாகமாக இருந்தது. ஆனால் தண்ணீர் குடிக்க மனம் வரவில்லை. வாசலை பார்த்தவாறு சுவரில் சாய்ந்து அமர்ந்து விட்டான். ஊரெங்கும் இருளும் அமைதியுமாய் இருந்தது. வீடுகளில் ஆங்காங்கே மெழுகுவர்த்திகளின் மங்கிய வெளிச்சம் திட்டு திட்டாய் ஒளிர்ந்தது.

சில நிமிடங்களில் செருப்பின் ஓசையும் அதனூடே மெல்லிய கொலுசொலியும் கேட்டது. அவன் மனம் பரபரப்படைந்தது. வாசலை நோக்கினான்.
அடுத்த சில வினாடிகளில் மகேஸ்வரி வாசலில் நின்று காலணியை கழட்டி போட்டாள்.

ஆம் அவளே தான். ஒல்லியான உடம்பு சில மைல் தூரம் நடந்து வந்த களைப்பில் கேசம் கலைந்து கிடக்க வியர்வை வழிய உள்ளே வந்தாள். வீட்டுக்கு வந்து சேர்ந்த நிம்மதியும்
கார்த்தியை பார்த்து விட்ட மகிழ்ச்சியும் முகத்தில் பரவியது. சோர்ந்து போய் அவனருகில் அமர்ந்தாள்.

ஏன் மகேசு இவ்வளவு நேரம்...? கோபமாய் கேட்டான் கார்த்தி.

பஸ்ஸு, ஷேர் ஆட்டோ ஒன்னு கூட இல்ல. அங்கிருந்தே நடந்தே வர்ரேன்.

அடுத்த வினாடி கார்த்தி தன்னை மீறி அழத்துவங்கி விட்டான். வெட்கமும் வேதனையுமாயிருக்க அவள் மடியில் முகம் புதைத்தான்.

மகேஸ்வரிக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் முதுகை தட்டியவாறு, "என்னெ.... என்னங்க... யாருக்கு என்ன ஆச்சு" என கேட்டுக்கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்துக்கு பிறகு கார்த்தி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு "ஏன் மகேசு, இவ்ளோ நேரம், நா எப்படி பயந்துட்டேன் தெரியுமா" என்றாள் மடியில் முகம் புதைத்தவாறே.

இதுக்கு தானாக்கும்... அய்ய.. நா என்ன சின்ன புள்ளயா..? எனக்கு வரத்தெரியாதாக்கும்..? என்றாள் மகேசு சிரித்தபடி அவன் தலைமுடிக்குள் விரல்களை அளாவிய வாறே.


சிறிது நேரத்தில் அவளது தம்பி வந்தான். "ஏன் இவ்ளோ லேட்டு" என விசாரித்து விட்டு மாமா கோபத்தில இருந்தாரே அதான் பாத்துட்டு போலாம்னு வந்தேன்.

"ஆமா அவரு கோபத்த நீதான் மெச்சுக்கனும். வீட்டுக்குள்ள வந்தா.. மடியில படுத்து ஓ..ன்னு அழுறாரு" மகேசு சிரித்தபடியே சொன்னாள்.

*************************************************************************************