சிறுகதை (122 வார்த்தைகள்) ஆர். தர்மராஜன்

கட்டுக்கோப்பு


கட்சியின் இடைக்காலத் தலைவர் சௌந்தர் பேசினார். “கட்சியோட அடுத்த தலைவரை
முடிவு பண்ணத்தான் கூடியிருக்கோம். நீங்க எல்லாரும் இங்க காபி சாப்பிடுங்க. நானும்
பொருளாளர் மதியரசனும் மாடிக்குப் போய்... ஆலோசனை பண்ணி... முடிவு சொல்லறோம்.”

மாடியில்... ஒரு அறையில்...

“மதி... தலைவர் பதவிக்கு எத்தன பேர் போட்டி?” சௌந்தர் கேட்டார்.

“ஐயா... அஞ்சு பேருங்க.”

“யார் மேல ரொம்ப சீரியசான கேஸ் இருக்கு?”

“கப்பலூர் மாசி... அப்புறம் குணசேகர வரதன். கஞ்சா... ஆள் கடத்தல்... கட்டப்பஞ்சாயத்து...
குணா மேல ரெண்டு கொலைக் கேஸ்...”

“மத்த மூணு?”

“சீட்டிங்... பணம் கையாடல்...”

“அந்த மூணு பேரை நீக்கிடு.”

“ஐயா... நீங்க சொல்றது...”

“மதி... கட்சி உடையற ஆபத்து வந்திருக்கு. இன்னிக்கி நிலைமைல... ஆளுங்களை பயப்பட
வெக்கறவனாலதான் கட்சியைக் கட்டுக்கோப்பா நடத்த முடியும். குணாவைத் தலைவராக்கிடுவோம்.
ஏன்னா... அவனைத்தான் கட்சியில எல்லாருக்கும் பயம்.”

“ஐயா... இன்னிக்கி மாசி வரலை... ஆனா நாளைக்கி அவன் பிரச்சனை பண்ணினா?”

“மாட்டான். அவனை இன்னிக்கி அதிகாலைல... குணா போட்டுத் தள்ளிட்டான். விஷயம் இன்னும்
நியூஸ் ஆகலை.”

“ஐயோ!”

“ஷ்! வா... குணா தலைவர்னு... அறிவிச்சுடுவோம். அப்புறம் கடவுள் விட்ட வழி.”

(முற்றும்)