அந்தி வேளை அந்திம வேளை
அறுபது தாண்டிய இளைஞர் பலர்
அரங்கம் நிறைந்த காட்சி பார்க்கில்
அடியவன் நானும் அவரிடையே ஆஜர்!
ஆடிப்போன உடல் வாடிப்போன முகம்
தேடிதேடி இடுங்கிய கண் சுருங்கிய கை
சர்க்கரை உப்பசம் கூடவே உப்பின் தேக்கம்
சகட்டு ‘மேனி’ யில் ! சமையலே செய்யலாம் !
நம்ம பை- பார்டைட் என்ன ஆச்சு ?சரி சரி
உன் பை பாஸ் எப்படி போச்சு ? இதுவே பேச்சு !
அடுத்த பென்ஷன் எப்போது வரும் ? அடடா !
அவரது பிரச்னைகள் ! அடுக்கடுக்காய் வரும்!
ஆசுபத்திரியில் முடங்கினானே வாயாடி மேகராஜன்
அதான்பா! நினைவில்லை ? நம்ம அத்யந்த நண்பன்
அதற்கப்புறம் எப்படி இருக்கான் ?என்ன ஆனான்?
எண்ணத்தின் ஓட்டம்! எக்ஸ்பிரஸின் வேகம் !
இன்று அவன் நாளை நான் ! இதுதானே உண்மை !
இதுவே முதுமை ! வெறுமையில் ஒரு இனிமை!
ம் ! இன்றைய தினத்தை அனுபவித்தோம் நன்றாய் !
இயலும் வரை அனுபவிப்போம்! நாம் ஒன்றாய் !
****
போன மாதம் , பார்க்கில் நண்பர்களுடன் இருந்த நேரம் ! அங்கு கண்டதை கண்டு , "கண்டதை கண்டு", எழுதிய கிறுக்கல் !! இருப்பினும்முதுமை வருத்தமில்லை. இது வாழ்க்கையின் ஒரு கட்டம் அவ்வளவே ! இப்பொழுது தான் வாழ்க்கையின் சுவையே கூடியிருக்கிறது என்று தோன்றுகிறது !
எழுதுகையில், பஜ கோவிந்தம் பாடல் நினைவுக்கு வந்தது : (ஆதி சங்கரர் சொன்னது ) . மிக துல்லியமாக சொல்லியிருக்கிறார் !
யாவத் வித்தோபார்ஜன ஸக்த:
தாவன்னிஜ பரிவாரோ ரக்த:
பச்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் கோபின ப்ருச்சதி கேஹே
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
பொருள் : எதுவரை சம்பாதிக்கிறோமோ, பொருள் கொண்டு வருகிறோமோ, அதுவரை தான் நம் உறவுகள் பரிவாரங்கள் உறவாடும் . காசு சம்பாதிப்பது நின்று விட்டால், நமது உடல் முடங்கிவிட்டால், நம்முடன் பேசுவதும் நின்று விடும் . எனவே இப்போதே இறைவனை நினை மனமே !
Bookmarks