வாய்மூடி புன்னைகைக்கும்
அழகான தோழி

நளினமாய் வெளிப்படும்
அன்பும்
கருணையும் கோபமும் கூட
உன் அழகு

எவ்வளவு துன்பம் வந்தாலும்
நல்லதையே செய்யும்
என் அருமை பாட்டி
உன்னிடம் நான்
கற்றுக்கொண்ட
பெரிய படிப்பு அதுதான்

தாத்தாவுக்கு பிடிக்காது என
நிறைய நகை போட்டு பார்க்காமல்
வெளிர் நிறம் உடுத்தாமல்
வாழும் நல்ல மனைவி

எத்தனை முறை
தாத்தா கத்தினாலும்
அமைதியாக அடுத்த வேலையை
பார்க்கும் அன்புப் பாட்டி

ஊர் வம்புக்கு போகாமல்
வெட்டிப் பேச்சு பேசாமல்
இன்று வரை வாழும்
மனிதருள் மாணிக்கம்

யாராவது வலிய வந்து
அவதூறு பேசினாலும்
பெரிய எருமை சாணியை
ஒதுக்குவது போல்
ஒதுக்கிவிட்டு
உன் வேலையை போய்ப் பார் என
சாதாரணமாய் நிலைமையை
சமாளிக்கும் திறமைசாலி

உன் வாடாமல்லி நிற குங்குமம்
வேண்டும் என கேட்டபோது
குனிந்து என் நெற்றியோடு
உன் நெற்றி வைத்து
தலையை ஆட்டி
அழுந்த பதிய வைத்தாய்

தாத்தா இறந்த பின்
ஊருக்கு போய்வந்த நீ
என்னிடம் கேட்டாய்

இந்த வீட்டில் இருக்க
பயமாய் இல்லையா என்று
ஏன் என்று நான் கேட்க
தாத்தா வந்தால் என்ன செய்வாய் என்றாய்

எதுக்கு பயம்?
வாங்கன்னு சொல்லி
உட்கார வைத்து
பேசிக்கிட்டிருப்பேன் என்று நான் சொல்ல

உன் கண்ணில் நிறைந்த கண்ணீரும்
அப்போது நீ தந்த முத்தமும்
இன்னமும் மறக்கலை

தாத்தா இடத்தில் தினமும்
வந்து உட்கார்ந்த அந்த சின்ன குருவிக்கு
தினமும் சாப்பாடு தண்ணீர் வைத்தது
பசுமையாய் நினைவிருக்கு

பாட்டி எனும் சொல்லைவிட
ஆத்தா என்பதே மனதிற்கு
நெருக்கமாயிருக்கு

ஆத்தா எனும் பேரிளம் பெண்
என் முதல் உதாரண மங்கை

வாழ்க பல்லாண்டு

உன் பிறந்த நாளில் வாழ்துகிறேன்