பாத்திரம் ஒன்று : வெங்கடேசன்
என் பெயர் வெங்கடேசன். என்னை எல்லாரும் குடிகாரன்னு சொல்றாங்க. நான் எப்பயாவதுதான் குடிப்பேன். ஏன் அப்படி சொல்றாங்கன்னு புரியல. எனக்கு ஒரு பொண்ணு. அது மூணாவதோ, நான்காவதோ படிக்குது. ஒரு நிமிஷம். நான் இப்ப டாஸ்மாக்குலதான் இருக்கேன். நான் மட்டுமா? உள்ள வந்து பாருங்க. ஒரு நாளைக்கு எத்தனை பேர் வராங்கன்னு தெரியும். என் பொண்டாட்டி நான் சொல்றத கேட்க மாட்டா. கொஞ்ச நாளா, அடிக்கடி யார் கூடயோ எல்லா நேரமும் போன்ல பேசுறா...எனக்கு இங்க ஒரு கம்பெனியில் வேலை. என்ன வேலைன்னு கேட்காதீங்க...கௌரவமான வேலை இல்லை. சும்மா எடுபிடி..டேய்..வெங்கடேசா, நேரா ஹெட் ஆபீஸ் போய், அந்த பீஒ பைலை வாங்கிட்டு வான்னு சொன்னா, டவுன் பஸ் பிடிச்சி போய் வாங்கிட்டு வருவேன்...எனக்கு குடிக்கறதே பிடிக்காது. ஆனா, இப்ப பாருங்க, தீபாவளி வருது. கை செலவுக்கு காசு இல்லை. என்னதான் செய்றது..ஒரே பொண்ணுக்கு துணி வாங்க கூட காசு இல்லை. அப்பத்தான், என் பிரண்ட் வந்தான். கூப்பிட்டான். சரின்னு வந்துட்டேன்..இப்ப மூணாவது ரவுண்டு...தொண்டை எல்லாம் எரியுது...என்ன செய்றது...ஆனா, இப்ப கொஞ்சம் சந்தோஷமா இருக்கு...உலகத்துல, நம்ம மட்டுமா இல்லாம இருக்கோம். நாடே கடன்லதான ஓடுது...அதுக்குதான் அரசாங்கமே, குடிச்சிட்டு சந்தோஷமா இருங்கன்னு, எல்லா இடத்திலயும் டாஸ்மாக்க திறந்து இருக்காங்க....கொஞ்சம் இருங்க...வாந்தி வரா மாதிரி இருக்கு....
பாத்திரம் இரண்டு : மைதிலி
என் பெயர் மைதிலி. மேல சொன்ன அந்த ஆளோட, மனைவி. அவன் எல்லாம் மனுஷனே இல்லை. செருப்பால அடிக்கணும். அவன இல்ல. என்னை. எங்க அப்பா போகும்போது, என்னையும் கூட்டிட்டு போகாம, இந்த ஆள் தலைல என்னை கட்டிட்டு போயிட்டாரு...அந்த ஆளுக்கு தொட்டதெக்கெல்லாம் சந்தேகம். மொடா குடிகாரன். கல்யாணம் ஆகும் பொழுது, நான்கு பவுனு இருந்தது. அம்மா கொடுத்தது. இந்த நாயி, எல்லாத்தையும் குடிச்சே தொலைச்சுட்டான். ஒரு பொண்ண வச்சிக்கிட்டு, எத்தனை நாள் பசியோட வாழ்றது....பக்கத்தில இருக்கிற மில்லில வேலைக்கு போறேன்....அங்கேயும் வந்து அசிங்கபடுத்திட்டான்...அங்க இருக்கிற ஓனர் ரொம்ப தங்கமானவர்..வயசானவர்..அவருக்கு நான் பொண்ணு வயசு..ஏதோ கொஞ்சம் உதவி செய்றார்...அங்க வந்து.....என்னால சொல்ல முடியல...அவ்வளவு கேவலமா பேசிட்டான்....ஒரு நிமிஷம் இருங்க...அவர்தான் எதுக்கோ போனில் கூப்பிடறாரு...
பாத்திரம் மூன்று: பாஸ்கர்
நான் மைதிலியோட அண்ணன். பேர் பாஸ்கர். நான் படுகிற கஷ்டம் யார்ருக்கும் வர கூடாது. எனக்கு சின்ன வயசிலே அப்பா கிடையாது. எனக்கு கீழே இருந்த, ரெண்டு தங்கைகளையும் நான்தான் படிக்க வச்சேன், கல்யாணம் பண்ணி வச்சேன். நான் பாக்கிற சாதாரண குமாஸ்தா வேலைக்கு இதெல்லாம் ரொம்ப கஷ்டம். ஆனா, போன எடத்தில ஒழுங்கா வாழணுமா இல்லையா? சதா பிரச்சனைதான். என்னால ஆபிஸ்ல வேலையே செய்ய முடியல. மனைவி நல்ல பொண்ணா இருந்ததுனால, பொழைச்சேன். என் பெரிய மாப்பிள்ளை குடிகாரன். என்னதான் செய்றது....டைவர்ஸ் பண்ணிட சொல்லிட்டேன்...வேற வழி இல்லை..
பாஸ்கர் வரும்பொழுது, நான் சேல்ஸ் ரிவியு மீட்டிங்கில் இருந்தேன். கலைந்த தலையும், கசங்கிய உடையுமாக இருந்தான்.
"டேய்....உன்னதான் பாக்கனும்னு தோணிச்சு..."
என் அலுவலக நடைமுறையில், டேய் என்பதெல்லாம் அன் பார்லிமெண்டரி வார்த்தை. பாஸ்கருக்கு அனுமதி உண்டு, தனிமையில்.
காலை பதினோரு மணிக்கு, காப்டேரியா காலியாக இருந்தது. டி வி யில் நேற்றைய டெஸ்ட் மேட்ச் யாரும் கவனிப்பாரன்றி ஓடிக் கொண்டிருந்தது.
"உன் பிரச்சனை சிம்பிள்....உன் தங்கைக்கு டைவர்ஸ் பண்ணனும்னு வந்திர்க்கே? கரெக்ட்?"
"ஆமாம்டா..." என்றான் அடிப்பட்டவனாக.
"இப்ப அதுக்கு அவசியம் இல்லை "
"நீ ஒரு முறை அவள வந்து பாரு...உனக்கே புரியும்.."
"என்னால புரிஞ்சிக்க முடியுது.....ஆனா, சில விஷயங்கள் நம்ம புரிஞ்சிக்கணும்..நாம உன் தங்கையின் ஒரு சைடு ஸ்டேட்மண்ட்தான் கேட்டுருக்கோம்...உங்க மாப்பிளைது?"
"அவசியம் இல்ல...அவன் குடிகாரன்"
"அப் கோர்ஸ்....ஆனா, நீ உன் தங்கையின் சார்பாதான் யோசிக்கிற...அதுல என்னால எமோஷனல் வால்யூஸ் தான் பார்க்க முடியுது...நீ அனுமதிச்சா இந்த பிரச்சனைக்கு ஒரு சின்ன சல்யுஷன் சொல்ல முடியும் "
"இதுக்கெல்லாம் என்ன சல்யுஷன்....அந்த ஆள் சாகிறது தான் இதுக்கு ஒரே சல்யுஷன்..."
"மறுபடியும் எமோஷனலா பேசறே...என்னிக்காவது ஒரு நாள், அவர , அதுதான் உன்னோடைய தங்கை வீட்டுக்காரர, நோயாளியா பார்த்திருக்கியா...இல்லை....ஹி இச் மென்டல்லி சிக்....அவருக்கு தேவை ட்ரீட்மென்ட்...குடியிலிருந்து வெளியே வரதுக்கு..நாட் டைவர்ஸ்."
நான் சொன்ன சமாதானம் அவனுக்கு பிடித்திருக்க வேண்டும். கையை பிடித்து கொண்டு, "ரொம்ப தேங்க்ஸ்டா..கடைசி முயற்சியா இதையும் பண்றேன்..."
அடுத்த வாரத்தில் பாண்டிச்சேரி அருகே, ஏதோ ஒரு ஆல்கஹாலிக் அனானிமசில் சேர்த்து விட்டான். ஒரு மாத ட்ரீட்மேண்டில் வெங்கடேசனிடம் நிறைய முன்னேற்றங்கள் வெளிப்படையாக தெரிந்தன.
கோபம் குறைந்து விட்டது. பழைய வேண்டாத சந்தேகம் எதுவும் தெரியவில்லை
"வெற்றிகரமாக மீண்டுட்டேன் சார்.." என்றான்.
"நிறைய தியானம் செய்றேன்...நிறைய படிக்கிறேன்..மனசு தெளிவா இருக்கு...நீங்கதான் அதுக்கு காரணம்.."என்றான்
"சே..சே... எல்லாம் சைன்ஸ்.....குழந்தைகளுக்கு சாக்லேட் ஆசை மாதிரி....இது ஒரு கெமிகல்...அது நம்ம ப்ரைன்ல பதிவாகி, மீண்டும் மீண்டும்...அந்த எண்ணங்கள் நம்மள ஆக்கிரமிக்கும்... இன் பாக்ட், இப்ப நம்ம சமூகத்திற்கே இந்த மன நோய் வந்திடிச்சி...மீண்டு வரதுதான் முக்கியம்..ஆல் தி பெஸ்ட் என்றேன்...
மைதிலி குழந்தையோடு வந்திருந்தாள். கண்களில் கொஞ்சம் எதிர்கால நம்பிக்கை தெரிஞ்சது.
"அண்ணா, நீங்கதான் தெய்வம்...எனக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்திருக்கீங்க.." என்று காலில் விழுந்தாள்.
வரும் வழியில், ஆத்தூர் தாண்டும் பொழுது, மைதிலி ஹண்ட் பேகில், மெலிதாக மொபைல் சத்தம் கேட்டது..
Bookmarks