டிஜிட்டல் உலகத்தில்
உனக்கு நீயே பிரம்மன்
உன்னை நீயே படைத்துக் கொள்கிறாய்
கருப்போ சிவப்போ மஞ்சளோ நீலமோ
நிறம் உன் விருப்பம்
நெட்டையோ குட்டையோ
வாட்ட சாட்டமோ வாளிப்போ
வடிவமும் உன்வசம்
உன் மனம் அங்கே நீயாகி விடுகிறது.
உன் மனம் விரும்பும் உருவம்
அங்கே உன்னுடையது
கடன் வாங்கி கடன் வாங்கி
ஒட்டுபவை எல்லாம்
உன் ரசனையைக் காட்டலாம்
அவை நீயாகி விடுவதில்லை
எழுத்துக்கள் ஒரு களிமண்..
எழுதுபவன் தன் உள்ளத்தை
அதில் அழுத்தி விட்டுச் செல்கிறான்.
படிப்பவனுக்குத் தெரிவது
அந்த உள்ளத்தின் படிமானங்கள்.
ஆறு லட்சம் ஆண்டுகளுக்கு முன்
ஆப்பிரிக்காவில் ஒரு ஆதி மனுஷி
விட்டுச் சென்ற காலடி போல
எழுத்துக்கள்
காலம், உலகம் அனைத்தையும் காட்டுகின்றன.
போலியாய் வெகுகாலம் எழுத முடியாது.
ஒன்றிரண்டு படைப்புகள் எழுதலாம்.
உன்னுடைய உள்ளம் எதுவோ
அதுவே நாளாக நாளாக வெளிப்படுகிறது.
நீண்ட காலமாய் எழுதுபவர்களின் உள்ளம்
திறந்த புத்தகமாகி விடுகிறது.
ஒருவரின் எழுத்தை
தொடர்ந்து படித்து வரும்பொழுது
அவரை அறிந்து
உள்வாங்கிக் கொண்டுவிடுகிறோம்.
அன்னியம் தெரிவதில்லை.
நிறையப் படைப்பதன் மூலம்
உங்களையே
நீங்கள் படைத்துக் கொள்கிறீர்கள்.
எழுதுங்கள் உங்கள் எண்ணங்களை
நீங்கள் நீங்களாக அறியப்பட!!!
இல்லையெனில்
அனூகசத்தி பிரவாஹ
அதாவது
காலமெனும்
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுங்கள்.!!
Bookmarks