விளைநெல்கள் விதைக்காமல்
வெடிகுண்டுகளை விதைத்ததால்
அறுவடைக்குப் பலியாகி
சிதைகளாகிய சதைகள் நாங்கள்...
கரைபுரண்டோடும் எங்கள்,
குருதியின் வாடையில்,
அன்பை சுவாசிக்கும்,
நீங்கள்தானே அயோக்கியர்?
ஏவுகணைக்குள் ஒளிந்திருக்கும்,
அமைதியும் மாண்பும்,
பச்சிளங்குழந்தைக்கும் புரிவதில்லை,
பாமரமக்களுக்கும் புரிவதில்லை...
அதன் மகத்துவம் தான் என்ன?
முதுகுக்குப் பின்னால்
பீரங்கி வைத்துக்கொண்டு,
முகத்தில் சமாதனம் பேசும்
உங்கள் பேச்சு தானே
பிணந்தின்னும் வாய்களின்
புனிதப் பிரச்சாரம்?
அதிகபட்சம் உயிர்ப்பிடுங்கல்,
குறைந்தபட்சம் காற்றில்மாசு,
இட்டகுண்டுகளை விழுங்கிய நிலங்களில்,
உங்கள்பார்வையில் நன்மைதான் என்ன?
சோற்றுக்குப் போராடி,
அவமானம் தாங்கும் நாங்கள்,
அகப்போரில் மாள்கிறோம்...
புறப்போரிலும் மாளவேண்டுமோ?
உள்ளத்தை இறுக்கி,
உலகத்தைத் தளர்த்தும்,
உங்களிடம் ஷேக்ஸ்பியரும்
காதல் வளர்க்கவில்லையோ?
இருக்குமிடம் இல்லையென்று,
செவ்வாயிலும் களங்கள்தேடும்
நீங்கள் கூட ஒருவித
களப்பணியாளர்கள் தான்...
Bookmarks