அவுஸ்திரேலியாவில் சிட்னியில் வில்லியம்சன் மற்றும் பெர்ரி ஆகிய இருவரும் அவர்களது இரண்டு சிறு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். வில்லியம்சன் ஒரு IT கம்பனி ஒன்றில் உத்தியோகம் பார்த்து வந்தான். அதேவேளை, பெர்ரியும் ஒரு தனியார் கல்வி கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
வில்லியம்சன் பணத்தை பெருக்குவதிலும் பிள்ளைகளை கவனிப்பதிலும் மட்டுமே குறியாக இருந்தான். அவனது தாயார் பற்றி அவன் சிந்தித்து பார்த்ததே இல்லை. அவன் தாயார் மொர்ரி கன்பெர்ரவில் ஒரு வீட்டில் தனியாகவே வசித்து வந்தார் . வில்லியம்சனின் தந்தை சிறுநீரக அழற்சியினால் காலமாகி 10 ஆண்டுகள் ஓடி விட்டன.
இறுதியாக அவன் தனது தாயாரை சந்தித்தது தந்தையாரின் இறுதி சடங்கில், அதாவது இற்றைக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு. அதன் பின்பு குடும்பத்தின் வேலைப்பழு நிமித்தம் தாயார் பற்றிய நினைவை துறந்தான். தாயார் பற்றி அவன் எண்ணிப்பார்ப்பது கூட கிடையாது. தாயார் ஒரு நீரிழிவு நோயாளி என்பதனையும் நன்கு அறிவான் அவன். ஆனால், அவனது குடும்ப சுமை தாயார் பற்றிய எண்ணங்களுக்கு தடை இட்டது.
ஒரு நாள் பெர்ரி அவனை ஒரு பூங்காவுக்கு அழைத்து சென்றாள். அங்கு அவனிடன் அவளுக்காக வில்லியம்சன் ஒன்றை செய்ய வேண்டும் என கேட்கவே, சற்றும் தயங்காது வில்லியம்சன் உறுதி அளித்தான். மனைவி மீது அத்தனை நம்பிக்கை கொண்டிருந்தான் அவன்.
"எனது அம்மாவின் சத்திர சிகிச்சைக்காக இன்னொரு 10 லட்சம் ரூபா தேவைப்படுகிறது. அதனை நான் வழங்கலாமா?" என பெர்ரி அவனிடன் வினவ, "தாரளமாக... இதை எல்லாம் என்னிடம் வினவ வேண்டுமா?" என்று கூறிய வண்ணம் தனது மனதின் அடியில் அமிழ்ந்திருந்த தாயார் மொர்ரியின் நினைவுகள் மேலோங்கப்பெற்றான்.
"பெர்ரி, அது போல் நானும் ஒரு விண்ணப்பதை உன்னிடம் வைக்கிறேன். அதனை நீ ஏற்க வேண்டும். நானும் எனது தாயாரை காண கான்பெர்ரா நாளை செல்ல வேண்டும்" என்று மனைவியிடம் ஒருவாறாக அனுமதி பெற்றுக்கொண்டான் வில்லியம்சன்.
மறுநாள் சனிகிழமை தாயாரை காணும் நோக்குடன் காரில் பயணத்தை ஆரம்பித்தான். அன்று மாலை வேளையில் அவரது இல்லத்தை அடைந்தான். அவனை கண்டதும் மொர்ரியின் முகம் "அன்றலர்ந்த செந்தாமரை" போல் மலர்ச்சியுற்றது. புதல்வனை உடனே அணைத்து பாச மிகுதியால் முத்தமிட்டாள். எனினும் அவள் மனதின் எங்கோ ஒரு மூலையில் சில வினாக்கள் தொடர்ச்சியாக தொடுக்கப்பட்டுக்கொண்டே இருந்தன.
"பல வருடங்கள் என்னை காண வராத என் மகன் ஏன் என்னை விஷேடமாக இன்று மட்டும் காண வர வேண்டும்? எதாவது பிரச்சனையாக இருக்குமோ?" என்ற சந்தேகம் அவளை உறுத்தியது. "வில்லியம்சன், உனக்கு எதாவது பிரச்சனையா?" என்றே வினவினாள் பதற்றத்துடன். "இல்லை அம்மா, தம்மை காணவே நான் இங்கு வந்தேன்" என்று பதிலளித்தான் வில்லியம்சன்.
"என்னை காண என் மகன் வந்தான்...." என்றே பூரிப்புடன் கொண்டாடினாள் மொர்ரி. "அம்மா, எனக்கு தங்களது கையால் செய்த சப்மரின் சாப்பிட ரொம்ப பிடிக்கும் " என்றே சொல்ல, "இதோ தயார் செய்து விடுகிறேன்" என்று விரைந்து சென்று சப்மரின் தயாரித்தாள். அவனும் வயிறாற அதனை உண்டுவிட்டு சிறிது நேரம் வீட்டில் ஓய்வு எடுத்தான்.
இராப்பொழுது வந்ததும் "அம்மா நாம் வெளியே சென்று ஒரு நல்ல ரெஸ்டாரண்டில் சாப்பிடலாமா?" என்று அவன் கேட்க தாய் மிகவும் அக மகிழ்வுடன் அவ்விண்ணப்பத்தை ஏற்றாள். வில்லியம்சன் அவளை "ஸ்டார் மரைன்" என்ற ரெஸ்டாரன்ட்டுக்கு அழைத்து சென்றான் .
"அம்மா ஞாபகம் வருகிறதா? இங்கே தான் நீங்கள் சிறு வயதில் என்னை அடிக்கடி அழைத்து வருவீர்கள்" என்று தாயாருக்கு சொன்னான். "வாழ்வின் அவ்வினிய தருணங்களை என்றென்றும் மறக்க இயலாது " என்றே சொன்னாள் மொர்ரி. அவள் மனது சுட்டி வில்லியம்சனை ரெஸ்டாரன்ட்டுக்கு கூட்டி வந்த அந்த அழகிய காலத்துக்கே பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டது.
இருவரும் ஆசனத்தில் சென்று அமர்ந்தார்கள். "அம்மா, வழமையாக நாம் வாங்கும் கிளப் சண்ட்விச் மற்றும் பேஸ்ட்ரி கொண்டு வர கட்டளை பிறப்பிக்கட்டுமா?" என்று மொர்ரியிடம் கேட்டான். மொர்ரியின் கண்களில் கண்ணீர் மழை. "அம்மா என்னவாயிற்று? ஏன் இப்போது கலங்குகிறீர்கள்?" என திகைப்புடன் கேட்டான் வில்ல்யம்சன்.
"அப்போதெல்லாம் நான் தான் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டு அவற்றை கொண்டு வருமாறு கட்டளை பிறப்பிப்பேன். அன்று எனது பீட்டரும் (வில்ல்யன்சனின் தந்தை) என்னோடு இருந்தார்" என்று கண்ணீர் மல்க விடையளித்தாள். "எனது தந்தையை என்றும் என்னால் மறக்க முடியாது . அவர் என்றும் என் நினைவில் வாழ்கிறார்" என்றே வில்லியம்சன் ஆறுதல் கூறினான்.
உணவுப்பண்டங்களை உண்டாகிய பின்னர் , பில்லினை (Bill) மேசையிலே வைத்து சென்றான் ஒரு பணியாள். "அம்மா நான் தான் உங்களுக்காகவும் இன்று பணம் செலுத்துவேன் " என்று சொன்னான் வில்லியம்சன். அவனது அன்பான கோரிக்கையை அவ்வாறே ஏற்கத் தலைப்பட்ட தாய் அவனை பார்த்து "நான் இன்று வரை உன்னிடம் கடனாளியாக என்றுமே இருந்ததில்லை வில்லியம்சன். என்றென்றும் அவ்வாறாகவே நான் இருக்க விரும்புகிறேன். இது போல் நானும் உன்னை ஒரு நாள் ரெஸ்டாரன்ட் அழைத்து வந்து உனக்கு பிடித்த உணவு வகைகளை வாங்கி தருவேன் சம்மதமா ?" என்று அன்பு ததும்ப வினவினாள்
தாயின் பாசத்தால் திளைத்த விண்ணப்பத்தை ஏற்ற வில்லியம்சன் "நாம் இன்னொரு நாள் சேர்ந்து கண்டிப்பாக ரெஸ்டாரன்ட் வரலாம்" என்றான். தாயாரை வீட்டில் இறக்கிவிட்டு அவன் சிட்னி நோக்கி புறப்படலானான்.
அவனது வேலைபழுவில் மீண்டும் மூழ்கியதால் தாயை பற்றி எண்ணி பார்க்க தவறினான். ஒரு நாள் "தாயார் ச்ய்லன்ட் ஹார்ட் அட்டாக்கினால் (Silent Heart Attack) இறந்துவிட்டார்" என்ற செய்தியே அவனை வந்து எட்டியது. தாயாரின் வீட்டுக்கு சென்று இறுதி சடங்குகளை தனது மனைவி மக்கள் சமேதரமாய் செய்து முடித்து வைத்துவிட்டு வீடு திரும்பினான்.
சில தினங்களில் அவனுக்கு ஒரு அஞ்சல் வந்தது. அது அவன் தாயாரால் மரணத்துக்கு முன்பு அவனுக்கு வரையப்பட்டது. அம்மாவின் பெயரை வெளியே கண்டதும் சற்றே சலனத்துடன் அதனை எடுத்து படிக்க ஆரம்பித்தான். "வில்லயம்சன், உனது தந்தை இறந்த பின் நான் வாழ்வில் ஒரு நாள் மட்டுமே பேரின்பம் அடைந்தேன். அது நீ என்னை அன்போடு காண வந்த நாள். அன்று மட்டுமே என் தோட்டத்து ரோஜா செடி பூத்துக்குலுங்கியது. ரொம்ப நன்றி மகனே "
அந்த அஞ்சலின் ஆரம்பத்தை படித்ததும் அவன் கண்களில் இருந்து கண்ணீர் அவனை அறியாமலே பெருகி ஓடியது. மனதினில் தைரியத்தை வரவழைத்தவனாய் தொடர்ந்து அஞ்சலை படித்தான். "மகனே, நான் அன்று கூறியது போல என்றுமே உனக்கு ஒரு கடனாளியாக இருக்கமாட்டேன். அந்த ரெஸ்டாரன்ட்டில் நான் முன்னதாகவே உணவு வகைகளை சுட்டி பணத்தையும் செலுத்திவிட்டேன் . அதற்குரிய பில்லினை (Bill) பின்னால் இணைத்துள்ளேன்".
தன்னை கட்டுபடுத்த முடியாதவனாய் கதறி அழுதான் வில்லியம்சன். அஞ்சலை தொடர்ந்து படித்தான். "நீ கலங்க தேவை இல்லை மகனே. என்ன, எனக்கு பதிலாக இந்த தடவை உனது மனைவி உன்னுடன் இந்த விருந்து உபசாரத்தில் கலந்துகொள்வாள் . நீ என்றும் என் உயிரே வில்லியம்சன். நான் உன்னை எப்பிறவியிலும் நேசிப்பேன் " என முடித்திருந்தாள் அவனது தாய்.
அஞ்சலை படித்து முடித்ததும் அவன் செய்வதறியாது திணறினான். தாயை எவ்வாறு தனியே தவிக்கவிட்டேன் என்பதை புரிந்து கொண்டான். ஆனால், அவன் செய்வதற்கு ஏதும் இல்லை. ஏன் என்றால் அவன் தாய் அவன் அருகில் இல்லை .
இக்கதை மூலம் உறவுகளுக்காக எவ்வளவு வேலைபழுக்களுக்கு மத்தியிலும் நாம் எம் காலத்தை ஒதுக்க தலைப்பட்டுள்ளோம் என்பதனை அறியலாம். அதனை புறக்கணித்தால் அவர்கள் பிரிவின் பின் வில்லியம்சன் போலவே செய்வது அறியாது திணற வேண்டிய நிலையே ஏற்படும்.
*******முற்றும்********
Bookmarks