தமிழரின் தாயகமாம் குமரி தனை
ஆர்ப்பரித்த ஆழி பேரலை
அள்ளி செல்கையில் நீ வரவில்லை!!
அவல பெண்ணின் மானம் டெல்ஹியில்
அசுரர் நால்வரால்
அபகரிக்கப்பட்ட போது நீ வரவில்லை!!
எங்கோ பறந்த மலேசிய விமானம்
மதியற்ற ரஷ்யரால்
மடக்கி வீழ்த்தப்பட்ட போது நீ வரவில்லை!!
இஸ்ரேல் காசா யுத்தத்தில்
இயம்பிட இயலா விபரீதங்கள்
இருந்தும் நீ வரவில்லை!!
துள்ளி விளையாடிய பள்ளி சிறார்- ஈழத்தில்
துவம்சம் செய்யப்பட்டார் - குண்டுகளால்
குருதி துடைக்க நீ வரவில்லை!!
முப்பது வருட தமிழர் போராட்டம்
சில மூர்க்கர்களால் மூன்றே நொடியினில்
முற்று பெற்ற போது நீ வரவில்லை!!
பாசுரம் பாடினேன் - பற்பல
பணிகள் அற்றோர்க்கு புரிந்தேன்
அப்போதும் நீ வரவில்லை!!
நீறு தரித்திட்டேன்
நீளமாய் நெற்றியிலே - உனை
நினைந்து ஆயினும் நீ வரவில்லை !!
உலக பந்தின் ஒவ்வொரு மூலையிலும்
உரைத்திட முடியா அநீதிகள்
உபாயம் தேட நீ வரவே இல்லை!!
இதற்கு பின்னும்
நீ வர காரணம் ஒன்று
உண்டோ என அறியேன்!!
Bookmarks