சிறியவள் கவியை சிந்தைக்கு விருந்தாக்கிய
சீர் மிகு கவிகோக்கு என் சிரம் தாழ்த்தி ....................
அறிவில் பெரியவர் தாம் ஆய்ந்து கூறிய
அத்தனை குறை நிறைகளையும் நான் ஏற்று
செறிவு கொண்ட உம் தமிழ் திறம்
செவ்வானில் சுடர் போல என்றும் ஜொலிக்க
பரிவு கொண்ட இவ்விளங்கோதை தன்
பாராட்டுகளை தெரிவிக்கிறாள்
வெருண்டோடிய புள்ளி மான்
வேடன் வலையில் சிக்கியது போல்
அருண்ட இரு விழியினுள் செறிந்த
அமிலத்தை தெளித்தாற் போல்
திரண்ட எம் தமிழர் குலாம் அன்று
திக்கு அறியாது மாய்ந்தனரே
உருண்டோடும் காலம் எல்லாம்
உள்ளமதில் இனி இர்ரணமே !!
வேல் கொண்டு பகைவர் சிரம் சாய்க்க
வெற்றி திருவேள் வருவானா? இல்லை அவர்
தாழ் பணியும் நிலையினை
தானிங்கு எமக்கு தருவானா
மேலான சிங்களவர் என்று இன்று
மேதினியோரும் கூறிடுவார் எனில்
தோள் கொடுத்து எம்மினத்தின்
தோதான புகழ் காக்க இனி யார் உள்ளார் ?
பேச்சினில் போர் தொடுத்து நாம்
பெற்றது தான் என்ன ? அறிவு
வீச்சினில் நாம் சிறந்தும் அவரிடம்
வீழ்ந்தது தான் ஏனோ? கோல்
ஓச்சும் தமிழ் ஈழத்தில் என்ற
கொங்கு தமிழ் முழக்கம் எல்லாம்
பாய்ச்சிய அவர் கணைகளுக்கு
பணிந்தது தான் ஏனோ ?
ஆழியும் கூட அழிக்க முடியா
அளப்பெரும் எம் தமிழ் தாய்
மூழி கொண்டு அன்று கயவர்
மூடிடுகையில் என் செய்தாள்?
வாழி தமிழ் மொழி என இன்றும்
வாயாற பாடுகிறான் - பெரும்
தாழியினுள் என்னை பகைவர்
இன்று தள்ளி விட்ட போதும் !!
Bookmarks