ஆதிகாலக் கனவுகளின் வண்ணங்களைக்
குழைத்தென் அன்பின் வார்ப்பில்
பிரத்தியேகமாய் வார்க்கப்பட்டவன் நீ!

மேனி போர்த்த வண்ணங்களில்
பிரதிபலித்துக்கிடக்குமென் பிரேமைக்கும்
பேராரவாரப் பெரும்புயலென
உன்னுள் புகும் தருணமெதிர்பார்த்து
என்னிதழ்க்கடையில் குந்திக்கிடக்கும்
அமுதவீச்சுக்குமாய்
அந்தரங்கத் தனிமையில் காத்திருக்கிறாய்
அசோகவனத்து ராமனாட்டம்!

உன் உயிர்ப்பின் மந்திரத்தை ஒளித்துவைத்த
கவிதையின் முகவரியைத் தொலைத்தலையும்
இப்பிச்சிக்காய் இன்னும் சில காலம் காத்திரு…
வந்துவிடுவேன் என்றேனும் ஒருநாள்…
ஏதேனும் ஒரு சென்மத்தில்!