தமிழ் எழுத்துலகில் தவிர்க்கவே முடியாத ஒரு ஆளுமை எஸ்ரா அவர்கள். அவருடைய வலைப்பக்கத்திலிருந்து ஒரு பதிவு.
விரும்பி கேட்டவை
வார்த்தை என்ற புதிய இலக்கிய இதழ் வெளியாகி உள்ளது. அதன் வெளியிட்டினை தொடர்ந்து மறுநாள் நண்பர்கள் சந்திப்பு மற்றும் சிறிய விருந்து ஒன்றிற்கு நண்பர் பிகே.சிவகுமார் ஏற்பாடு செய்திருந்தார். அதில் கலந்து கொள்ள நண்பரின் அலுவலகத்திலிருந்து கிளம்பினேன்.
வழியில் ஒரு சிறிய தொலைபேசி உரையாடல் காரணமாக வழி சொல்ல மறந்து போய் வானகஒட்டுனர் என்னை பெருங்குடி பக்கமாக கூட்டிக் கொண்டு போய்விட்டார்.
எப்படி இவ்வளவு சரியாக வழிமாறி இவ்வளவு தூரம் வந்தோம் யோசிக்கும் போது ஆச்சரியமாக இருந்தது. அந்த அளவு எங்களை உத்வேகமூட்டிய அந்த தொலைபேசி
உரையாடல் இப்படிதானிருந்தது.
ஹலோ.. சாகுல்ஹமீதா.
இல்லைங்க. தவறான எண்?
இல்லையே சரியா எண்ணை தானே போட்டேன்
நீங்க சரியாக தான் போட்டீங்க. ஆனா தவறா என் நம்பருக்கு வந்திருச்சி.
அப்போ நீங்க சாகுல் ஹமீதா
இல்லைங்க நான் ராமகிருஷ்ணன்
உடனே போன் வைக்கப்பட்டது. அடுத்த சில நிமிசத்தில் அதே நம்பர் திரும்பவும்
ஒலித்தது
ஹலோ சாகுல் ஹமீதா
இல்லைங்க நான் ராமகிருஷ்ணன்.
அதான் அப்பவே சொல்லீட்டீங்களே.
இப்பவும் நான் ராமகிருஷ்ணன் தாங்க
அப்போ இது சாகுல்ஹமீது நம்பர் இல்லையா?
எனக்கு சாகுல் ஹமீதை தெரிஞ்சா தானே அது அவரோட நம்பரா இல்லையானு சொல்ல
முடியும்
ஆனா சாகுல் ஹமீது நம்பர் இது இல்லைனு உங்களுக்கு எப்படி தெரிஞ்சது
நான் சாகுல் ஹமீது இல்லையே.
அப்போ அவரோட நம்பர் என்ன?
எனக்கு அவரை தெரியாதே
நீங்க
நான் ராமகிருஷ்ணன்.
அதை தான் ஏற்கனவே சொல்லீட்டீங்களே.
இப்போ உங்களுக்கு என்ன வேணும்
என் அவசரம் தெரியாம ஏன் கோவிச்சிகிடுறீங்க. சாகுல் ஹமீது நம்பரை எப்படி
நான் தெரிஞ்சிகிடுறது
அதை சாகுல் ஹமீது கிட்டே தான் கேட்கணும்
நம்பர் தெரிஞ்சா கேட்ருவேன். நம்பர் போட்டா தப்பான ஆளுக்கு இல்லே போகுது
தப்பான ஆளுனு ஏன் சொல்றீங்க. நீங்க தப்பான எண்ணை போட்டுட்டு
நான் நம்பர் கரெக்டா தான் போடுறேன். ஆனா தப்பா ஆகிட்டா. அதுக்கு நானா
பொறுப்பு
இப்போ உங்களுக்கு என்ன வேணும்
சாகுல் ஹமீது நம்பர் எனக்கு வேணும். நான் காலையில் இருந்து டிரை
பண்ணிகிட்டு இருக்கேன்
என்னை கேட்டா எப்படி தெரியும். ஏன் இம்சை பண்றீங்க
ஹலோ.. தெரியாம தானே கேட்குறேன். ஏன் புரிஞ்சிகிட மாட்டீங்கிறீங்க
இப்போ என்ன செய்ய சொல்றீங்க
உங்க நம்பரை முன்னாடி சாகுல் ஹமீது வச்சிருந்தாரா?
இல்லை இந்த நம்பரை நாலுவருசமா நான் தான் வச்சிருக்கேன்
அது எப்படி நான் முந்தா நாள் கூட பேசினேன்
அதுவும் என்கிட்டே தான், நான் சாகுல்ஹமீது இல்லேனு சொன்னனே
அது எப்படி நான் நம்பர் போட்டா உங்களுக்கு கரெக்டா வந்திருது
எனக்கு எப்படி தெரியும். நீங்க யாரு ..உங்களுக்கு இப்போ என்ன வேணும்
ஏய் சாகுல் விளையாடுறது போதும். உண்மையை சொல்லிரு
யோவ் நான் சாகுல் இல்லைனு சொல்றேன். புரியாதா? என்று கோபத்தில் சொன்னேன்.
மறுமுனையில் சப்தமேயில்லை. இதற்குள் நான் வந்த காரிலிருந்த டிரைவர்
சிரிப்பை அடக்கமுடியாமல் என் வீட்டிற்கு போகும்பாதையை விட்டு வேறு பாதையில் கர்மசிரத்தையாக போய் கொண்டிருந்தான்.
அடுத்து சில நிமிசங்களில் அதே நம்பரில் இருந்து போன் வந்தது. ஆத்திரத்தில் போனை எடுத்து ஹலோ என்றேன்
மறுமுனை எவ்விதமான தயக்கமும் இன்றி ஹலோ சாகுல் ஹமீதா என்று கேட்டது
ஆமா சொல்லு என்றேன்
இப்போ தான் உன் நம்பர் போட்டேன். தப்பா போயிருச்சி. எவனோ ஒரு விளக்கெண்ணை
பேசுனான்
இப்பவும் அந்த விளக்கெண்ணெய்கிட்டே தான் பேசிகிட்டு இருக்கீங்க
அப்போ சாகுல் இல்லையா?
நான் ராமகிருஷ்ணன்
போன் துண்டிக்கபட்டது, அப்போது தான் கவனித்தேன் பெருங்குடியை தாண்டி பழைய
மகாலிபுரம் சாலையில் போய்க் கொண்டிருந்தது கார்.
ஒட்டுனரிடம் எங்கேய்யா போறே. என் வீடு சாலிகிராமத்திலே இருக்கு
அதை சொல்லவேயில்லை.
அங்கிருந்து தானே காலையில் நாம் வந்தோம்
நீங்க திரும்ப வீட்டுக்கு போவீங்கன்னு எப்படி தெரியும்
அப்போ எங்கே போவேனு நினைச்சே.
அது எனக்கு எப்படி தெரியும்.
வண்டியை திருப்பு
வண்டியை திருப்பியபடியே ஒட்டுனர் வீடு வரும்வரை எனது போனை பார்த்து பார்த்து சிரித்து கொண்டு வந்தார்.
எந்த நேரத்தில் சாகுல் ஹமீது போன் பண்ணுவாரோ என்று எனக்கு ஒரு பக்கம் உள்ளுக்குள் அச்சமாக இருந்து கொண்டேயிருந்தது. வீடு வந்து சேர்ந்தபிறகு ஒரு மிஸ்டு கால் இருந்தது. அது சாகுல் ஹீமதா என்று தெரியவில்லை.
அவரும் என் சகஹிருதயர் தானில்லையா?
நன்றி - எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள்
http://www.sramakrishnan.com/?p=377
Bookmarks