பிறிதொரு நாளில்...
பிறிதொரு நாளின் அந்தி பொழுதில்
கூடு திரும்பும் பறவைகளை வேடிக்கை காண நான்...
கூடியிருக்கும் பறவைகளின் கூட்டத்தில்
சிறு கல்லெறிந்து கலைந்து செல்லுவதை
வெகுளியாய் மட்டும் ரசித்து சென்றிருந்தேன்
கலைந்து செல்வதை கண்டும் கவலைதான்
கண்டு கொள்ளாமல் இருந்ததும் கவலைதான்
பொறிவைக்கும் எண்ணமும் இல்லை
பொத்தி பிடிக்கவும் மனமில்லை
பிறிதொரு நாளில் விட்டெறிந்த கல்லொன்று
பட்டு அலறிய பறவையொன்றின் சிறகுகளால்
சிதறிய துளி ஒன்று என் மேல் பட்டிருந்தது…
பட்ட துளியொன்று விஷம் என்று ஒருவனும்
மானமே போனதாய் இன்னொருவனும்..
பிறிதொரு நாளில் விதைத்த விதையொன்றின்
ஒற்றை பழம் ஒன்றை பறித்து சென்றது அந்த பறவை...
அதன் பிறகு அந்த பறவையை நானும் கண்டிருக்கவில்லை
அந்த குளம் பக்கம் நானும் சென்றதில்லை...
பட்டமரமும் இன்னும் முறிக்கபடவில்லை...
Bookmarks