அனேக பெண்களின்
தாலிகளையும்
அடகுக்கு அனுப்பிவிட்டு
அற்புதமாய் சிரிக்கின்றன
பயிர்கள்
வாடையின்
மெல்லிய எழுச்சியிலே
வளைந்தாடும்
அவற்றின் வனப்பு கண்டே
அத்துனை உழவனுக்கும்
மறந்துபோய்விட்டது
பசி
கரும் பச்சையின்
கள்ள வசீகரத்திலே
எல்லாமும்தான்
மறந்துபோய் விட்டது
எட்டா இடுபொருளும்
விற்கா விளைபொருளும்
எல்லாமும்தான்
மறந்துபோய்விட்டது
வளர்கின்றன பயிர்கள்
உடல்கருக
உதிரம் உரைய
வியர்வை வழிய
வளர்கின்றன பயிர்கள்
கடைசியில்
களம் சேர்ந்தது
தாணியம்
விதைக்கும் வட்டிக்கும்
விளைச்சலில் கொஞ்சமும்
அறுப்புக்குக் கூலியாய்
அதுபோல கொஞ்சமும்
உரம் பூச்சி மருந்துக்கு
உள்ளதில் கொஞ்சமும்
கொஞ்சமாய் கொஞ்சமாய்
போனது கொஞ்சமும்
எஞ்சிய தாணியந்தான்
எம் பசி போக்குமோ
எங்கூட்டுக்காரியின்
தாலியை திருப்புமோ
வரும்பருவ நடவுக்கு
விதையுந்தான் வாய்க்குமோ
ஒவ்வொரு உழவனின்
வீட்டுக்குள்ளிருந்தும்
ஊமையானதோர் குமுறல்
வீதியோடு
சங்கமிக்கிறது
மழைவந்து மூட்டிய
ஆசையை
கடன்வந்து
கருவறுக்க
மிச்ச மீதியிருக்கும்
பூச்சிக் கொல்லிக்கும்
வேலையிருக்குது
விளைச்சலை ஜீரனித்து
நகரம் சிரிக்குது.]
Bookmarks