தேவையின் நிமித்தம் தேடப்படும்போதுதான்
தெரியவருகிறது இருத்தலும் இல்லாமையும்.
ஏனெனில்….
கண்டுபிடிக்கும் தருணங்களுக்கு நிகராக
கவனங்களை ஈர்ப்பதில்லை
காணாமற்போகும் தருணங்கள்!
இன்னவிடத்தில் இன்ன நேரத்தில்
இன்னாரால் இன்னவாறாக
காணாமற்போய்விட்டதென்பதை
கண்டிப்பாய் வரையறுக்கவியலாநிலையில்
அவநம்பிக்கையும் அசிரத்தையுமான தேடலின் முடிவில்
அயர்ந்தமரவைக்கிறது இயலாமை.
கவனிப்பாரின்றி நலிந்து மெலிந்து நாளடைவில்
காலாவதியாகிப்போயிருக்கலாம்.
அதன் சொல்லொணாத் துயர்மிகு சோகக்கூவல்
உடையவரைச் சேரமுடியாமல் ஓய்ந்துபோயிருக்கலாம்.
உள்ளேகும் புத்துருப்படிகளால் உதாசீனப்படுத்தப்பட்டு
புறவாசல் வழியே போக்கடிக்கப்பட்டிருக்கலாம்.
கண்ணெதிரே இருக்க நேர்ந்திடினும்
வசீகரமிழந்த அதனிருப்பு அதுதான் இதுவென்று
வகையாய் அடையாளங்காட்டத் தவறிப்போகலாம்.
இருத்தலும் இல்லாமையும் ஒன்றென
உணரப்படுவதான வலி சாதாரணமானதல்ல.
வரிகளை வாசித்துக் களைத்தோர்
காணாமற்போனதெதுவென்று அறியவிரும்புவீராயின்
கிலேசத்துக்காளாக வேண்டாம்.
உயிராகவோ…. உறவாகவோ…. உடமைப் பொருளாகவோ
ஊகித்தலும் உருவகப்படுத்தலும் உங்கள் உரிமையே!
Bookmarks