விளிம்பின் நுனியில்...
விளிம்பின் நுனியில்
தவழும்
மயான அமைதியின்
இறுக்கத்தில்
என் மனம் உழலட்டும்..
கோடித்துணியாய்
அணிவகுத்துச் செல்லும்
மேகங்களின் வெறுமையில்
என்னைத் திளைக்கச் செய்..
கண் முன் விரியும்
பாதாளப் பள்ளத்தாக்கில்
நெஞ்சுக் கூடு
நடுங்குவதை எனக்கு
உணரச் செய்..
ஒரு கணம்
என்னை சிறகில்லாமல்
அங்கிருந்து பறக்கச் செய்..
விளிம்பின் நுனியில்
இருந்து காணுமிடமெங்கும்
சிதறிக் கிடக்கின்றன
சொற்கள்..
ஒரு கிருமியாய் இருந்து
என்னை தின்று சுவைத்து
ருசி பார்க்கும் சொற்கள்
முழுமையாய்
தின்று தீர்த்து முடிப்பதற்குள்
புவி ஈர்ப்பு விசைகள் அற்று
பறக்கும் அந்த ஒரு கணத்தில்
என்னைக் கொன்று கொண்டிருக்கும்
சொற்களை மரித்துப் போகச் செய்..
விளிம்பின் நுனியில்
ஒரு புல்லாய்,
சருகாய், சவ மேகமாய்,
பள்ளத்தாக்கை
நிரப்பியிருக்கும் மயான அமைதியாய்..
ஏதோவொன்றாய்
என் இருப்பு இருக்கட்டும்..
சொற்களால் தின்னப்படும்
ஜடமாய் மாத்திரம் வேண்டாம்..
Bookmarks