"தனிநபர் வழிபாடு' நமக்கும் உடன்பாடு இல்லை என்பதை அந்த நாளிலேயே செயலில் காட்டியவர் எம்.கே.தியாகராஜபாகவதர்.
மகாத்மா காந்தியிடம் அவர் அளவற்ற மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தது என்னவோ உண்மைதான். "காந்தியைப் போலொரு சாந்த சொரூபனைக் காண்பது எளிதாமோ?' என்று அவர் பாடியதும் என்னவோ உண்மைதான். ஆனால் அவற்றுக்காக அவர் தமக்கென்று ஒரு தனி வழி வகுத்துக் கொண்டிருந்ததை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை.
""இந்திய விடுதலைக்கு இணங்காதவரை இரண்டாவது உலக மகா யுத்தத்தில் இந்தியா பிரிட்டிஷாரோடு ஒத்துழைக்காது'' என்றார் காந்திஜி. ""இந்திய விடுதலை வேறு; இரண்டாவது உலக மகாயுத்தம் வேறு'' என்றார் பாகவதர்.
இப்படிச் சொன்னதோடு அவர் நிற்கவில்லை. அப்போது சென்னை கவர்னராக இருந்த "சர் அர்தர் ஹோப்', ""யுத்த நிதிக்கு நீங்கள் எங்களுக்குச் சில நாடகங்கள் நடத்திக் கொடுத்து உதவ வேண்டும்'' என்று கேட்டுக் கொண்ட போது, ""அதற்கென்ன நடத்திக் கொடுக்கிறேன்'' என்று நடத்திக் கொடுத்தார்.
அப்போது புகழ் பெற்ற காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்த திரு.சத்தியமூர்த்தி,""ஒய் பாகவதரே... யுத்த நிதிக்கு நீர் நாடகமா நடத்திக் கொடுக்கப் போகிறீர்? நாடகம்? இரும் இரும் உம்முடைய பாகவதர் பட்டத்தையே பறிமுதல் செய்து விடுகிறேன் '' என்றார்.
அதைக் கேட்ட பாகவதர் என்ன செய்தார்? வேறொன்றும் செய்யவில்லை; சிரித்தார். அதற்குப் பின் கவர்னர் ஹோப் தலைமையில் ஊருக்கு ஊர் பாகவதரின் நாடகம் நடந்தது, பணமும் லட்சக் கணக்கில் குவிந்தது.
இதன் பலனாய் பிரிட்டிஷார் பாகவதருக்கு "திவான் பகதூர்' பட்டம் கொடுக்க முன் வந்தார்கள். பாகவதர் இதற்கும் சிரித்தார்.
""ஏன் சிரிக்கிறீர்கள்?'' என்ற பிரிட்டிஷாரைப் பார்த்துப் பாகவதர் சொன்னார்:
""பட்டத்துக்காக நான் உங்களுக்கு உதவவில்லை. இந்திய மக்களைப் போலவே இந்த உலகத்து மக்கள் அனைவருமே úக்ஷமமாய் இருக்க வேண்டும் என்பதே என் லட்சியம். அதற்காகவே ஏதோ என்னால் முடிந்த உதவியைச் செய்தேன். உங்கள் பட்டம் எனக்கு வேண்டாம்; போய் வாருங்கள்''
("எம்.கே.டி. பாகவதர் கதை' என்ற நூலில் விந்தன்)
நன்றிகள்:தினமணி
Bookmarks