கணேஷ் , சென்னையில் ஒரு தொழில் அதிபர். 45 வயது இளைஞன். டைமன்ட் எக்ஸ்போர்ட்ஸ், ஆடைகள் தயாரிப்பு தொழிற்சாலையின் சொந்தக்காரன்.
வருஷம் ஒரு தடவை வெளிநாடு சுற்றுலா, கடனில் வீடு, கடனில் தொழிற்சாலை, ஆடம்பர வாழ்க்கை. வரவுக்கு மீறிய செலவு.
அவன் மனைவி ஊர்மிளா கணேஷை விட ஒரு படி அதிகம். சரியான நகைப் பைத்தியம் மட்டுமல்ல. பகட்டு, படாடோபம், டாம்பிகத்திற்கு ஒரு சரியான உதாரணம். ஊதாரிக்குடும்பம். சுருக்கமாக, வருங்கால பிச்சைக்காரர்கள்.
கணேஷ் அப்பா, அடிக்கடி சொல்வார். “ இதோ பாரு கணேஷ்! உன் போக்கே சரியில்லை. சம்பாதிக்கறதை செலவு பண்ணிட்டு, மிச்சமிருந்தா மீதியை சேமிக்கணும்னு நினைக்காதே. அது முட்டாள்தனம். சம்பாதிக்கிறதிலே, சேமிப்பு போக, மிச்சத்தை செலவு பண்ணு. அதுதான் புத்திசாலித்தனம்.”
அது கணேஷை பொருத்தவரை செவிடன் காதில் சங்கு. பெருசுக்கு வேறே வேலை இல்லை. வாழ்க்கையை அனுபவிக்க தெரியாத அசடு.
இவர்கள் இல்லற வாழ்க்கையில், சேமிப்பு என்கிற பேச்சுக்கு இடமே இல்லை.
இப்போது கொஞ்ச நாளாக கணேஷுக்கு தொழில் நஷ்டம். கடன் தொல்லை. ஒரே குழப்பம்.
***
வங்கி கிளை
“சொல்லுங்க மிஸ்டர் கணேஷ்! எப்படி இருக்கீங்க ?” – பேங்க் மேனேஜர் கணேஷை வரவேற்றார்.
“அதை ஏன் சார் கேக்கறீங்க? பேசாமே பாக்டரியை இழுத்து மூடிட்டு போகலாமாங்கிற அளவுக்கு போயிடுச்சி” – கணேஷ்
“அட கஷ்டமே! நான் கூட உங்க ஸ்டாக் ஸ்டேட்மெண்ட் பார்த்தேன். ப்ரொடக்ஷன் ரொம்ப கம்மி மாதிரி இருக்கே! ரா மெட்டிரியல்ஸ் வாங்கி இருக்கிறதும் கம்மியாத்தான் இருக்கு. என்ன ஆச்சு?”
“முன்னெல்லாம் மூணு ஷிப்ட் பாக்டரி போயிட்டிருந்தது. இப்போ ஒரு ஷிப்ட் தான். அதுக்கே வேலை இல்லை. ஏற்றுமதி ரொம்ப குறைந்து போயிடுத்து. என் ஏற்றுமதி மார்க்கெட் விலை நமக்கு கட்டுபடி ஆகலை. லேபர் ப்ரோப்ளம் வேறே. ஒன்னும் முடியலே சார்!” அலுத்துக்கொண்டான் கணேஷ்.
“அக்கௌன்ட் கூட ஆறு மாசமா ரொம்ப இர்றேகுலர்ன்னு எங்க லோன் அதிகாரி சொன்னார்! ” மேனேஜர் கவலை அவருக்கு.
‘அது விஷயமாத்தான் உங்களை பாக்க வந்திருக்கேன் சார். எனக்கு ஒரு ஐம்பது லக்ஷம் வேண்டியிருக்கு. புது மெஷின் வாங்கணும்”
“சாரி மிஸ்டர் கணேஷ். நான் இப்போ ஒன்னும் பண்ண முடியாது. நிறைய நோட்டீஸ் உங்களுக்கு அனுப்பியிருக்கோம். ஆனால், எந்த நடவடிக்கையும் நீங்க எடுக்கலே. அதனால், மேலிடத்திலே இதை வாராக் கடன் அப்படின்னு முத்திரை குத்தி, பணத்தை ரெகவர் பண்ண சொல்லியிருக்காங்க. கோர்ட்லே கேஸ் வேறே போடச்சொல்லி நெருக்கறாங்க. என் வேலைக்கே உலை வந்துடும் போல இருக்கு”
“ஐயோ சார், என் நிலைமை ரொம்ப டைட் சார், உங்க பாங்கை நம்பித்தான் நானே வந்திருக்கேன். நீங்க ஹெல்ப் பண்ணியே ஆகணும்”
“சான்சே இல்லை கணேஷ். ரொம்ப சாரி. உங்க வீட்டுக் கடன் வேறே ஒரு வருட பாக்கி இருக்கு. நீங்க உடனே ஒரு முப்பது லக்ஷம் ஏற்பாடு பண்ணி கடனை நேர் பண்ணப் பாருங்க. அதுக்கப்புறம், நானே மேலே பேசி, மெஷின் கடனுக்கு ஏற்பாடு பண்றேன்”
வேறே ஒண்ணும் முடியாதா சார்? நம்ம தொழில் மினிஸ்டர் என்னோட உறவுக்காரர் தான். அவர்கிட்டே வேணா சொல்லி ...” இழுத்தான்.
“ அதெல்லாம் வேண்டாம் மிஸ்டர் கணேஷ். ஆவரதில்லே. வேறே பிரச்சனை வந்துடும். ஒரு மாசத்திலே கடனை சீர் பண்ணிடுங்க. இந்த விஷயத்திலே, மேலிடம் ரொம்ப ஸ்ட்ரிக்ட். என்னை கிழிக்கறாங்க. நீங்க சரி பண்ணலைன்னா, உங்க வீட்டை ஏலத்திற்கு கொண்டு வரச்சொல்லி யிருக்காங்க. ரொம்ப சாரி மிஸ்டர் கணேஷ்.”
****
கணேஷ் வீடு
“என்னங்க! ரொம்ப வாட்டமாயிருக்கீங்க! பாக்டரியிலே ஏதாவது பிரச்னையா?” – மனைவி ஊர்மிளா.
“உனக்கு தெரியாததா ஊர்மிளா? பிசினஸ் ரொம்ப நஷ்டம். கடன் கொடுத்தவங்க நெருக்கராங்க. பாக்டரி கடன், வீட்டு கடன், வட்டியோட சேர்ந்து பூதாகாரமா நிக்குது. என்ன பண்றதுன்னே தெரியலே.”
“ஐயோ! நமக்கு ஏன்தான் இந்த கஷ்ட காலமோ? வேறே ஏதாவது கடன் கிடன் முயற்சி பண்ணீங்களா? ”
“பண்ணேன். ஒண்ணும் கிடைக்கலே. பேங்க் கையை விரிச்சுட்டாங்க. முதல்லே கடனை சரி பண்ணு. பின்னாலே பாக்கலாம்னு சொல்லிட்டாங்க. அப்பாகிட்டே பணம் கேட்டேன். அவரது திருச்சி பக்கத்திலே தரிசு நிலத்தை ஒண்ணா வித்துக்க சொன்னார்”
“நீங்க என்ன சொன்னீங்க?”
“அது வேஸ்ட் ஊர்மிளா. எப்போவோ சல்லிசா வரதுன்னு வாங்கி போட்டார்.. அதை வித்து வர காசு, கால் வாசி கடனுக்கு கூட காணாதும்மா. எனக்கு குறைந்தது ஒரு ஒரு கோடியாவது வேணும், இப்பத்திக்கு கடனை சமாளிக்க.”
“வேறே என்ன வழி?”
“இந்த வீட்டை வித்துடலாம்!. ஐம்பது லக்ஷம் கிடைக்கும். மிச்சத்தை அங்கே இங்கே வாங்கி சமாளிச்சிப்பேன்.”
“ஐயோ! அப்போ நாம்ப எங்கே போறது? நடு ரோட்டுக்கா? இப்பத்தான், நிறைய செலவு பண்ணி, வாசல் லான், தோட்டம், ஊஞ்சல் அப்பிடின்னு , பாத்து பாத்து பண்ணியிருக்கேன். வீட்டை உள்பக்கம் இடிச்சி ரி மாடல் பண்ணிட்டிருக்கேன்.. இந்த ஐடியாவை விட்டுடுங்க. ப்ளீஸ்”
“அதுவும் சரிதான். ஊருக்கு வெளியே வீடு. யார் வாங்குவாங்க ? பத்து வருஷம் கழிச்சி வேணா ரேட் ஏறும். அப்போ நகைகளை வித்துடலாமா?”
“என்ன, உங்களுக்கு விளையாட்டா இருக்கா? இதெல்லாம் பின்னாடி குழந்தைகள் கல்யாணத்திற்கு. அதுவுமில்லாமே, எல்லாம் பேன்சி நகைகள். கல் வெச்சி, மாடர்ன் டிசைன். வித்தா சேதாரம் போய், ரொம்ப கம்மியாத்தான் கிடைக்கும். போயும் போயும் உங்களுக்கு இப்படி கேவலமா ஐடியா தோணுதே? நகையை விக்கறதாம்? ம்..”
“பின்னே என்னதான் வழி ஊர்மிளா?”
“யோசனை பண்ணுங்க!. எதாவது பிளான் போடுங்க. பேங்க் மேனேஜர் கிட்டே டைம் கேளுங்க. வீடு விக்கறது, நகை விக்கறதெல்லாம் வேணாம்.”
கணேஷ் யோசித்தான். என்ன பண்ணலாம்? எதாவது பண்ணித்தான் ஆகணும்.
****
.... தொடரும்.....இதே திரியில் கீழே
Bookmarks