நடுநிசியில் சடக்கென எழுந்துகொண்டு
இமைக்குவளை நிறைத்த மதுரசமேந்தி
உன் உடல் உள்ளம் யாவற்றையும்
ஏன் அர்ப்பணித்திருந்தாய் என் காலடியில்?
கணப்பொழுதும் ஏன் என்னைக் காதலித்திருந்தாய்?
இந்த சலுகையை எங்கிருந்து பெற்றாய் என்றேன்
மேற்கொண்டு என்னைப் பேசவிடாமல்
என் அதரங்களில் உன் அதரங்களை
அழுத்தமாய்ப் பதித்திருந்தாய்!
கணப்பொழுதும் ஏன் என்னைக் காதலித்திருந்தாய்?
வாழ்வின் அக்கணமானது அமரத்துவமானது…
இன்றென் மனமெழுப்பும் இன்னிசை யாவும்
அன்றென் இதயத்தில் நீ
அதீதமாய் நிரப்பியவற்றின் அதிர்வெதிரொலிகள்தாமே!
கணப்பொழுதும் ஏன் என்னைக் காதலித்திருந்தாய்?
(மூலம்: ஹரிவம்ஷ்ராய் பச்சன் அவர்கள் எழுதிய ‘Shan Bhar Ko Kyon Pyar Kiya Tha?’ என்னும் இந்திக்கவிதை.)
Bookmarks