உன் மீது நேற்றிலிருந்து கோபம்
அலார மணி அடித்தது
செல்போனைப் பார்த்தேன்
நீயிருந்த ஸ்க்ரீன்சேவர்
பூக்களாகிச் சிரித்தது;
பல்துலக்காமல் காபி குடிப்பது
உனக்குப் பிடிக்காது
என்பதற்காகவே மிச்சம்
வைக்காமல் குடித்தேன்;
குளித்து முடித்தேன் இன்னுமும்
கோபம் குறையவில்லை
நீலநிற உடை
மஞ்சளாய் மாறியது;
என் அலுவலகம் செல்லும்
வழியில் உன்னுடையதும்;
கவனமாய் இருந்தேன்
அந்தப்பக்கம் பார்க்கவேயில்லை;
தவறுதலாகக் கூட உன்
பெயர் டைப்பி
விடக்கூடாது கீபோர்டில்
அதிகப்படி கவனமுற்றேன்;
இளையராஜா பாட்டையும்
ஜன்னலோர நிலாவையும்
துரத்தி விட்டுத் தான்
அன்று தூங்கினேன்;
மீண்டும் அலாரம் அடித்தது
இப்போதும் சொல்கிறேன்
நேற்று முழுதும்
உன்னை நினைக்கவேயில்லை..
Bookmarks