வீம்பு பிடித்த நம் இருவருக்கிடையில்
தானும் வீறாப்பாய் அமர்ந்துகொண்டு
நம்மைப்பார்த்து நகைத்துக்கொண்டிருக்கிறது
நமக்கே உரித்தான நம் காதல்!
சீண்டுவாரற்று சித்தம் சலித்ததோ?
சின்னக்குழந்தை போல் மெல்ல ஊர்ந்து
விளையாடவருகிறது நம்மிடத்தில்!
விரட்டலும் விலக்கலுமின்றி
பாராமுகமாய் ஊடித்திரியும் நம்மிடையே
ஒளிந்துவிளையாடும் காதலுக்கு
ஒருவரிடமும் வரவேற்பில்லை.
நாளெல்லாம் ஒற்றையாய்
ஆடிக்களைத்து அருகமர்ந்த காதலை
போதும் விளையாட்டென்று
வாரியணைத்துக்கொள்கிறேன் வாஞ்சையுடன்!
காத்திருந்தாற்போல் நீயும்....
கைகொள்ளாது அள்ளிக்கொள்கிறாய்
காதலோடு என்னையும்!
Bookmarks