கண்டிருந்தாலும் உன்னை
கவனித்ததில்லை நின்று.
கண்பார்வையில் என்ன
கணித்ததில்லை நான்.
உடனிருந்த பூவையரோடு
உன்பேச்சு மெல்ல காதோரம்
உணர்த்தியது என்னை.
உன்னோடு எனக்கிருந்த ஒத்துணர்வை.
நான் வெறுங்கையனல்ல..
நாணிப்போகவில்லை
நான்கொண்ட என்னுணர்வை.
நானாக உனக்குனர்த்த
மெல்லிய நடுக்கம்
மெல்ல சிதறவிட்ட பார்வை.
மென்சிரிப்பு மேவ
மென்னடை..விடையில்லை..
ஒருவார்த்தை பேசாது
ஒருவனான நினைவோடு
ஒரு திங்கள் காத்திருந்து
ஒப்பவில்லை உன்மனம்
எனக்கானது இல்லையென
என்னோடு சமர்செய்து
என்னெஞ்சு விம்ம
எதிர்வந்தாய் புன்னகையாய்.
ஆகாயம் சாட்சியில்லை.
ஆதவனும் பங்கில்லை.
ஆர்ப்பாட்டம் மிகையில்லை
ஆனாலும் காதலில் நாம்.
பேசியது கடுகாயினும்
பேச்செதுவும் வீணில்லை.
பேசாமல் அருகிருந்த
பேரின்ப நாட்களது.
எனக்கான வேலையது
எனைப் பரதேசி ஆக்கிவிட
என்னிலே உன்னையூன்றி
எல்லைகளைத் தாண்டினேன் நான்.
நிறைவேறிய கடைமைகளால்
நிதான எண்ணம்கொண்டு
நில்லாத மனதோடு -அகவைகள் சிலகடந்து
நின்றேன் தூரமாய் அவளெதிரில்
அதே மென்னடை - என்னிலுறைந்த
அதே உருவம், சிரிப்பில்லை.
அவள் விரல்பிடித்து - யாரது..
அவளின் ...???
ஏமாற்றுக்காரியில்லை அவள்.
ஏமாந்திருப்பாளோ -வேண்டாம்
ஏனிந்த துர் எண்ணம்
ஏழெழுபது ஆண்டுகள் நன்றாக வாழட்டும்
ஏனிந்த பெருமூச்சும் பார்வை மங்கலும்
ஏனென்றால்..அறியேன் நான்.
Bookmarks