பிப்ரவரி 28 , " தேசிய அறிவியல் நாள் " என இந்தியவில் கொண்டாடப்பட்டது . அதை முன்னிட்டுத் தமிழ் விஞ்ஞானி ஒருவரைப் பற்றிய தகவல்களை இரு ஆங்கில நூல்களிலிருந்து திரட்டி மொழிபெயர்த்து மன்றத்தில் பதிகிறேன் , சில நாள் தாமதமாய் .
கோளியற்பியலில் ( Astrophysics) உலகு புகழும் தமிழர் , பேராசிரியர் சந்திரசேகர் . இவருடைய தந்தை சுப்பிரமணியம் இந்திய வடமேற்கு ரயில்வேயின் துணைப் பொதுக் கணக்காய்வராய் ( Auditor) லாகூரில் பணி ஆற்றியபோது சந்திரசேகர் பிறந்தார் . ( 19 -10 -90 ) . இது இவரது பாட்டனாரின் பெயர். அவர் ஆந்திராவில் கணிதப் பேராசிரியர் . அவருடைய பிள்ளைகளுள் ஒருவர் இயற்பியல் நோபல் பரிசு பெற்ற வெங்கட்டராமன் (சி.வி.ராமன் ) ; நம் சந்திரசேகருக்குச் சிற்றப்பா .
குழந்தைக்கு எட்டு வயது ஆனபோது குடும்பம் சென்னைக்குக் குடி பெயர்ந்தது .

இங்குப் பட்டப் படிப்பை முடித்துவிட்டு இங்கிலாந்தில் வானியல் கற்றபின் சந்திரசேகர் , 1936 இல் , அமெரிக்காவின் கேம்பிரிட்சு பல்கலைக்கழகத்து மாணவர் ஆனார் ; அந்தப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் , சர் . ஆர்தர் ஸ்டான்லி எடிங்டன் ( Sir Arthur Stanley Eddington) உலகக் கோள் இயற்பியல் அறிஞர்களுள் தலை சிறந்தவராய் மதிக்கப்பட்டவர் . அவர் கிரீன்விச் நோக்ககத்தின் ( Observatory ) பிரதான உதவியாளராய் 1906 இலிருந்து ஏழாண்டுக் காலம் உழைத்துவிட்டுக் கேம்ப்ரிட்சில் பேராசிரியரானார் . 1926 இல் அவர் வெளியிட்ட " விண்மீன்களின் உள்கட்டமைப்பு " ( The internal constitution of stars ) என்னும் நூல் இன்றளவும் செவ்வியல் படைப்பாகக் கருதப்படுகிறது . அவரது காலம் 1882 - 1944 .

சந்திரசேகர் , தம் அரிய ஆராய்ச்சியின் விளைவாய்க் கண்டுபிடித்த ஒரு புதிய கோட்பாட்டைத் (Theory ) தெரிவித்தார் : ஒரு விண்மீன் , வெள்ளைக் குள்ளன் ( white dwarf) நிலையை அடைந்தபின்பும் இறுகும் என்பதுதான் அந்தக் கோட்பாடு . அதுவரை அறிவியலுலகு நம்பியிருந்தது என்னவென்றால் , " எந்த விண்மீனும் தன் இறுதிக் காலத்தில் மிகச் சிறுத்து ஒரு கடைசிக் கட்டத்தை அடையும் ; அப்போது அதற்கு வெள்ளைக் குள்ளன் என்று பெயர் " என்பதே . இதற்கு மாறாய்ச் சந்திரசேகரின் கோட்பாடு இருந்தமையால் வானியல் அறிஞர்கள் அதை எதிர்த்தார்கள் > முதன்மை எதிர்ப்பாளர் எடிங்டன் . இந்தப் பேராசிரியர்க்கும் இவரது மாணவர் சந்திரசேகருக்கும் இடையே காரசார விவாதங்கள் நடைபெற்றன ; ஆயினும் பகைமை தோன்றவில்லை .

இறுதியில் சந்திரசேகரே வென்றார் . ஒரு வெள்ளைக் குள்ளன் அடையக்கூடிய அதிக பட்ச பொருண்மையின் ( Mass) அளவை அவர் கணித்துக் கூறினார் ; அதனை ஏற்றுக்கொண்ட வானியல் வல்லுநர்கள் அந்த அளவினுக்குச் " சந்திரசேகர் எல்லை " ( Chandrasekar Limit ) எனப் பெயர் சூட்டி அவரது புகழ் , உலகம் உள்ளவரை நின்று நிலைபெறச் செய்துள்ளார்கள் .

அது மட்டுமல்ல ; இன்னொரு பெருமையும் அவருக்குக் கிட்டியது :

1999 ஜூலை 23 இல் , விண்ணில் இருக்கிற புதிர்க் கதிர்களை ( X Rays ) க் கவனித்து அறிவதற்காக ஒரு நோக்ககச் செயற்கைக் கோள் ( Observatory Satellite ) அமெரிக்காவிலிருந்து வான் நோக்கி வெற்றிகரமாய்ச் செலுத்தப்பட்டது . அதற்கு அட்வான்ஸ்டு எக்ஸ்ரே அஸ்ட்ரானமி ஃபசிலிட்டி எனப் பெயர் வைத்திருந்தார்கள் ; தமிழில் , " முன்னேற்றமுடைய புதிர்க் கதிர் வானியல் கருவி " எனலாம் . சந்திரசேகரைக் கௌரவப்படுத்துவதற்காக அந்தப் பெயரைச் " சந்திரசேகர் நோக்ககம் " என மாற்றினர் ; அது சுருக்கமாகச் " சந்திரா நோக்ககம் " என்று சுட்டப்படுகிறது .

73 ஆம் பிறந்த நாளாகிய 19-10-1983 இல் வெளியாயிற்று நோபல் பரிசுக்கான அறிவிப்பு ; இயற்பியலுக்காக அதைப் பெற்ற இரண்டாம் தமிழர் என்பது நமக்கெல்லாம் பெருமை அல்லவா ?

அவருடைய தாயார் சீத்தாலட்சுமி ; மனைவி லலிதா , கணவரைவிட நான்கே நாள் இளையவர் . குழந்தைப் பேறு வாய்க்கவில்லை மாரடைப்பால் 21-8-95 இல் சந்திரசேகர் காலமானமை அறிவியல் உலகுக்குப் பேரிழப்பு என்பது மிகை அல்ல .

================================